இந்தோனேசியாவில் குழந்தை அடைகாப்புப் பெட்டி - வாடகைக்கு இலவசம்
பொறியியல் துறைப் பேராசிரியர் ஒருவர், வசதி குறைந்தவர்களுக்கு இலவசமாக குழந்தை அடைகாப்புப் பெட்டியை வாடகைக்குக் கொடுத்து உதவி வருகிறார்.
ஜக்கர்த்தா, இந்தோனேசியா : பொறியியல் துறைப் பேராசிரியர் ஒருவர், வசதி குறைந்தவர்களுக்கு இலவசமாக குழந்தை அடைகாப்புப் பெட்டியை வாடகைக்குக் கொடுத்து உதவி வருகிறார்.
அதனால் குறைமாதத்தில் பிறந்து உரிய பராமரிப்பு இன்றி மாண்டுபோகும் சிசுக்களின் விகிதம் கணிசமாகக் குறையத் தொடங்கியுள்ளது.
ரால்டி அர்ட்டோனோ கோயேஸ்டோயேர் என்னும் அந்தப் பேராசிரியர், 2012-ஆம் ஆண்டில் அந்தச் சேவையைத் தொடங்கினார்.
எளிதில் எடுத்துச் செல்லும் அடைகாப்புப் பெட்டிகளைத் தமது பொறியியல் திறனால் உருவாக்கி, அதை வசதி குறைந்தவர்களுக்கு இலவசமாக வாடகைக்குத் தந்துவருகிறார்.
620 டாலர் செலவு செய்தால் ஓர் அடைகாப்புப் பெட்டியை உருவாக்கிவிட முடியுமென்கிறார் பேராசிரியர்.
தனிமனிதர்களின் நன்கொடையால் அடைகாப்புப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்துவருகிறார் அவர்.
அரசாங்கம், பொதுச் சுகாதாரக் காப்புறுதி முறையின்கீழ் குறைமாதக் குழந்தைகளுக்கு உதவி வந்தாலும், எல்லாருக்கும் அந்த வசதி கிடைக்கச் செய்வது நடைமுறைச் சாத்தியமில்லை.
ஆகவே, தன்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்கிறார் பேராசிரியர்.
குறைமாதக் குழந்தைகள் மரண விகிதத்தில், இந்தோனேசியா உலக அளவில் 5ஆம் இடத்தில் உள்ளது.
ஆண்டுதோறும் அங்கு சுமார் 675,700 சிசுக்கள் உரிய பிரசவகாலம் நிறைவுபெறும் முன்னரே பிறக்கின்றன.
அதன் காரணமாக, ஐந்து வயதுக்குள் மாண்டு போகும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அங்கு அதிகம்.
அவ்வாறான மரணங்களே நிகழக்கூடாது என்பதே தமது இலக்கு என்கிறார் தாயுள்ளம் கொண்ட பேராசிரியர்.