ஜக்கர்த்தா: சிறையிலிடப்பட்ட முன்னைய ஆளுநர் மேல்முறையீடு
ஜக்கர்த்தாவில் சிறையிலிடப்பட்ட முன்னைய ஆளுநர் பசுக்கி பூர்ணமா, தாம் குற்றவாளி என்ற நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறார்.
ஜக்கர்த்தாவில் சிறையிலிடப்பட்ட முன்னைய ஆளுநர் பசுக்கி பூர்ணமா, தாம் குற்றவாளி என்ற நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறார். இஸ்லாத்தை அவர் நிந்தித்ததாக ஜக்கார்த்தாவின் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
கிறிஸ்துவரான பூர்ணமா, திருக்குர்ஆனை அவமதித்ததாகக் கூறி, நீதிமன்றம், இம்மாதம் அவருக்கு ஈராண்டுச் சிறைத்தண்டனையை விதித்தது. அதிர்ச்சி ஏற்படுத்திய அந்த முடிவு, சமய சகிப்புத்தன்மைக்கு அந்நாடு பெற்றுள்ள நற்பெயரைப் பாதித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
தற்போது சிறையில் இருக்கும் பூர்ணமா அவரது வழக்குரைஞர்கள் மூலம் ஜக்கர்த்தாவின் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
தங்கள் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலத்தை நீதிபதிகள் முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை என்று பூர்ணமாவின் வழக்குரைஞர் ரோனி தலபேஸ்ஸி, ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஜக்கர்த்தாவின் முதல் சீன வம்சாவளி ஆளுநராகப் பணியாற்றிய பூர்ணமாவின் மேல்முறையீட்டு விசாரணை முடியும்வரை அவரைப் பிணையில் விடுவிக்குமாறு அவரது வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.
கடந்த ஐம்பதாண்டில் ஜக்கர்த்தாவின் முதல் முஸ்லிம் அல்லாத ஆளுநராகவும் அவர் இருந்தார்.