அங்கோர் வாட் கோவில் நுழைவாயிலில் புதிய மிதவைப் பாலம்
கம்போடியாவில் உள்ள புகழ்பெற்ற அங்கோர் வாட் ஆலய வளாகத்தைச் சாலையுடன் இணைக்கும் பழைய கற்பாலத்துக்கு பதிலாகப் புதிய மிதவைப் பாலம் ஒன்று உருவாக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.
புனோம் பென் : கம்போடியாவில் உள்ள புகழ்பெற்ற அங்கோர் வாட் ஆலய வளாகத்தைச் சாலையுடன் இணைக்கும் பழைய கற்பாலத்துக்கு பதிலாகப் புதிய மிதவைப் பாலம் ஒன்று உருவாக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.
சுமார் 6,700 பிளாஸ்டிக் தோம்புகளைக் கொண்டு மிதவைப் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 170 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் உள்ள அதன் கட்டுமானப் பணி, கடந்த நவம்பரில் தொடங்கியது.
ஒரு நேரத்தில் அந்த மிதவைப் பாலத்தை, 1,360பேர் வரை பயன்படுத்த முடியும். பழைய கற்பாலத்தைச் சீனா, ஜப்பான் ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள் புதுப்பித்து வருகின்றனர்.
200 மீட்டர் நீளமுள்ள கற்பாலத்தின் இரண்டாம் கட்ட புதுப்பிப்புப் பணி இப்போது நடைபெறுகிறது. பழமையான அங்கோர் பாணிக் கட்டடக் கலையின் அடிப்படையில், பழமை மாறாமல் அது புதுப்பிக்கப்படுகிறது.
உலகின் ஆகப் பிரபலமான பயணத் தலமாக, அங்கோர் வாட் ஆலயம் அண்மையில் தெரிவு செய்யப்பட்டது. உலகப் பயணிகளுக்கான TripAdvisor இணையவாசலின் பயனீட்டாளர்கள் வாக்களித்து அதனைத் தெரிவு செய்தனர்.
1990-களின் தொடக்கத்தில் சுமார் பத்தாயிரமாக இருந்த அங்கோர் வாட் பயணிகளின் வருடாந்தர எண்ணிக்கை, இப்போது 2 மில்லியனைத் தாண்டிவிட்டது.