"என் பாட்டைப் பாடாதே" - எஸ் பி பிக்கு இளையராஜா எச்சரிக்கை
இசைஞானிக்கும் எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கும் இடையே என்ன தான் நடக்கிறது?
இசைஞானிக்கும் எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கும் இடையே என்ன தான் நடக்கிறது?
80களில் இணைசேர்ந்து பல மெட்டுகளை "ஹிட்டுகளாகச்" செய்த இருவருக்கும் நடுவில் இப்போது பிரச்சினை.
தாம் இசையமைத்த பாடல்களைத் தம் அனுமதி இல்லாமல் பாடக் கூடாது என்று எஸ் பி பாலசுப்ரமணியத்துக்குத் தமது வழக்கறிஞரைக் கொண்டு சட்டக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் இளையராஜா.
அத்துமீறீப் பாடினால் மிகப் பெரிய அபராதத் தொகை விதிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். இவற்றைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் எஸ் பி பி.
எஸ் பி பாலசுப்ரமணியம், இசையுலகில் தமது 50ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்க, "எஸ் பி பி 50" என்ற இசை நிகழ்ச்சியை ஆகஸ்ட் மாதத்திலிருந்து நடத்தி வருகிறார். அவருடன் பின்ணனிப் பாடகர்கள் சித்ரா, அவரது மகன் சரண் ஆகியோரும் நிகழ்ச்சி படைத்துவருகின்றனர்.
அண்மையில் சிங்கப்பூரில் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து, இலங்கை, மலேசியா, ரஷ்யா, துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
இளையராஜா இல்லை என்றால் என்ன? எதிர்வரும் நிகழ்ச்சிகளில், மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களைப் பாடுவதாக ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார் எஸ்.பி பாலசுப்ரமணியம்.
தமது நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.