கார் சக்கரத்திற்கு அருகே சிக்கி 16 கி.மீ சென்றும் உயிர் பிழைத்த கோலா
கார் சக்கரத்திற்கு அருகே சிக்கிய பெண் கோலா ஒன்று 16 கிலோ மீட்டர் சாலைப் பயணத்தைக் கடந்தும் உயிர் பிழைத்துள்ளது. அந்த அதிசயச் சம்பவம் ஆஸ்ரேலியாவில் நிகழ்ந்தது.
சிட்னி: கார் சக்கரத்திற்கு அருகே சிக்கிய பெண் கோலா ஒன்று 16 கிலோ மீட்டர் சாலைப் பயணத்தைக் கடந்தும் உயிர் பிழைத்துள்ளது. அந்த அதிசயச் சம்பவம் ஆஸ்ரேலியாவில் நிகழ்ந்தது.
கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது அதன் சக்கரப் பகுதிக்குச் சென்ற கோலா, சக்கரத்திற்கும் அருகிலுள்ள தடுப்புக்கும் இடையே சிக்கிக் கொண்டது. அதை உணராத கார் ஓட்டுநர் காரைக் கிளப்பி எடுத்துச் சென்றுவிட்டார்.
பயந்துபோன கோலாவின் ஓலத்தைச் சற்று நேரம் கழித்துதான் கேட்டார் கார் ஓட்டுநர். காரிலிருந்து இறங்கிப் பார்த்தபோது, கோலா சிக்கியிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார் அவர்.
கோலாவின் உடலில் இருந்த முடி, சூட்டில் பொசுங்கும் வாடை அப்போது எழுந்ததாக அவர் சொன்னார். தீயணைப்பு படையினர் வந்து கோலாவைப் பாதுகாப்பாக விடுவித்தனர்.
கோலா காயமின்றித் தப்பியது பெரிய அதிசயம்தான். ஆனால், பாலூட்டும் அந்தப் பெண் கோலாவின் குட்டி என்னவானது என்பது தெரியவில்லை என வருந்துகிறார் கார் ஓட்டுநர்.