Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பழங்காலப் பாண்டியர் கோட்டை கண்டுபிடிப்பு

உக்கிரன்கோட்டைப் பகுதியில் 1,250 ஆண்டுகள் பழைமையான பாண்டிய மன்னரின் படைத்தளமும் கோட்டையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -

தமிழ்நாடு, இந்தியா: திருநெல்வேலியிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உக்கிரன்கோட்டைப் பகுதியில் 1,250 ஆண்டுகள் பழைமையான பாண்டிய மன்னரின் படைத்தளம் மற்றும் கோட்டையைத் தமிழகத் தொல்லியல் துறையினர் அகழ்வாய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 2 மாதங்களாக அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  5 இடங்களில் தலா 4 அடி ஆழம், 15 அடி நீளத்துக்குக் குழிகள் தோண்டி அந்த அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த இடங்களில் பாண்டியர்களின் படைத்தளம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகத் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

கி.பி. 768 முதல் 815-ம் ஆண்டு வரையில் மதுரையைத் தலைநகராக கொண்டு பராக்கிரம வீரநாராயணன் என்ற உக்கிரபாண்டியன் ஆட்சி செய்திருக்கிறார். அவரது ஆளுகைக்கு உட்பட்டு திருநெல்வேலி உள்பட தென்பகுதிகள் இருந்துள்ளன. இந்தப் பகுதிகளைக் கண்காணிக்கவும் படைகளை அனுப்பவும் படைத்தளபதிகள், படைக் கலன்கள், படைவீரர்கள் தங்கியிருக்க உக்கிரன் கோட்டையில் படைத்தளம் இருந்திருக்கிறது.

ஆனைமலையிலிருந்து கிடைத்த கல்வெட்டில் `களக்குடி நாட்டு கரவந்தாபுரம்’ என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் களக்குடி, உக்கிரன்கோட்டை அருகேயுள்ள பகுதியாகும். இதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பகுதிக்கு வந்து ஆய்வு செய்தபோது, பண்டையகாலத்தில் பயன்படுத்திய பல்வேறு பொருட்களும் கிடைத்தன. இதனால் இப்பகுதியில் அகழ்வாய்வு செய்யும் திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்தோம். கடந்த 2 மாதமாக இந்த அகழ்வாய்வில் எனது தலைமையில் 4 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். இங்கு படைத்தளத்துடன் கோட்டை இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. 

சுடுமண் பொம்மைகள், சங்குக் கண்ணாடி பொருட்கள், தளஓடுகள், சிவன்கோயில் கட்டுமானம், நந்திசிலைகள், உடைந்த பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.ஆயுதங்கள் செய்வதற்காக உலோகங்களை உருக்க அந்த பானைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் அங்கு ஆயுத சாலையும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த அகழ்வாய்வு மேலும் ஒரு மாதத்துக்கு மேற்கொள்ளப்படும். அகழ்வாய்வின் முடிவில் அங்கு கிடைத்த பொருட்களை மக்கள் பார்வையிட காட்சிப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

நன்றி: தி இந்து

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்