பெற்றோர் பேச்சைக் கேட்காத பிள்ளைகள்
பெற்றோருக்குக் குடும்பத்தால் மட்டும் மனவுள்ளைச்சல் ஏற்படுவதில்லை. சமூகம், சுற்றுச்சூழல், வேலையிடம் எனப் பல காரணங்கள் உண்டு.
பிள்ளைகளுக்குச் சிறந்த உதாரணங்களாகத் திகழ வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு.
நல்வழி காட்டி, ஆலோசனைகளைக் கூறி சிறந்த வாழ்க்கைமுறையைப் பிள்ளைகள் கடைப்பிடிக்க பெற்றோரின் பங்கு மிக முக்கியம். அவர்கள் சந்திக்கும் சவால்கள் ஆயிரம்.
அண்மையில் ஆய்வு ஒன்றில் தாங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன என்ற கேள்விக்குப் பதிலளித்த பெரும்பாலானோர், பிள்ளைகள் தங்களின் பேச்சைக் கேட்பதில்லை, தங்களின் விதிமுறைகளைக் கேட்டு நடப்பதில்லை என்று குறைபட்டுக்கொண்டனர்.
பள்ளிகளில் அமைதியாக இருக்கும் பிள்ளைகள் சிலர் கூட வீடுகளில் அதிகம் கூச்சலிட்டுப் பிடிவாதம் பிடிப்பதாகவும் பெற்றோர் கூறினர்.
அந்த நிலைமை மாற, பெற்றோர் சில நடவடிக்கைகளை எடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
- எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளலாம்
காலவோட்டத்தோடு பிள்ளைவளர்ப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
முன்பு பெற்றோர் சொல்வதைப் பிள்ளைகள் கேட்டு வளர்ந்தனர்.
இப்போது பிள்ளைகள் சொல்வதைக் கேட்டு வளர்க்க வேண்டிய காலம்.
நமது எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டு அவர்களின் திறமை என்ன; ஆசை என்ன என்று கேட்டு அதன்படி திட்டமிடுதல் நல்லது.
- சரியான முறையில் பிள்ளைகளை நடத்துவது
வயது என்னவாக இருந்தாலும் அனைவருக்கும் மரியாதை கொடுத்தல் அவசியம்.
வயது அதிகரிக்கும் போது, அவர்களின் வயதை நினைவூட்டும் பெற்றோர் அதற்கேற்பப் பிள்ளைகளை நடத்துவது உண்டா?
பிறர் முன் திட்டுவது; அவர்களுக்கு ஒன்றும் தெரியாது எனக் கடுமையான சொற்களைப் பயன்படுத்துவது, அவர்களின் உணர்வுகளைப் புறக்கணித்தல் போன்ற செயல்களைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும்.
- ஒவ்வொரு பிள்ளையும் ஒருவிதம்
தனித்துவத்தைப் பாராட்ட வேண்டும். ஒரு பிள்ளையை இன்னொரு பிள்ளையுடன் ஒப்பிடுதல் சரியல்ல.
கண்ணோட்டங்கள் மாறுபடும்போது அதற்கேற்ப விளக்கங்களையும் பிள்ளைகள் எதிர்பார்ப்பர். அதைப் புரியும் வகையில் தெளிவாகக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.
- நேரத்தைப் பிள்ளைகளோடு செலவழித்தல்
பிள்ளைகளுக்கு விளையாடுவதும் தொழில்நுட்பமும் பிடித்திருந்தாலும், பெற்றோரோடு நேரம் செலவிடுவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.
அதற்கேற்ப நடவடிக்கைகளை உற்சாகமாகத் திட்டமிடுவதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.
- கற்றலைத் தொடர வேண்டும்
பிள்ளைகளுடன் இணைந்து பெற்றோரும் கற்றலைத் தொடர வேண்டும். நூலகம் செல்லலாம். பிள்ளை நூல் வாசிக்கும்போது பெற்றோரும் உடன் அமர்ந்து வாசிப்பில் ஈடுபடலாம். பயிலரங்குகளுக்குச் செல்லலாம்.
செடிகளை ஒன்றாக நடுவதில்கூட நிறைய அம்சங்களை இருதரப்பும் கற்றுக்கொள்ளலாம்.
பிள்ளைகள் படித்தும் கற்றுக்கொள்வர். பெற்றோரைப் பார்த்துக் கவனித்தும் கற்றுக்கொள்வர்.
பெற்றோருக்குக் குடும்பத்தால் மட்டும் மனவுள்ளைச்சல் ஏற்படுவதில்லை. சமூகம், சுற்றுச்சூழல், வேலையிடம் எனப் பல காரணங்கள் உண்டு.
அவ்வப்போது பெற்றோர் பிள்ளைகளோடு வெளிநாடு அல்லது வெளியிடங்களுக்குச் செல்லும்போது புத்துணர்வு கிட்டும்.