ஹலிமா யாக்கோப் அதிபர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சிங்கப்பூரின் முன்னைய நாடாளுமன்ற நாயகர் திருவாட்டி ஹலிமா யாக்கோப், குடியரசின் அடுத்த அதிபர் பதவியை ஏற்கவிருக்கிறார்.
சிங்கப்பூரின் முன்னைய நாடாளுமன்ற நாயகர் திருவாட்டி ஹலிமா யாக்கோப், குடியரசின் அடுத்த அதிபராகப் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு. முகமது சாலே மரைக்கான், திரு. ஃபரீட் கான் இருவரும் தங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
அதிபர் தேர்தலுக்கான தகுதிச் சான்றிதழ் திருவாட்டி ஹலிமாவுக்கு மட்டுமே கிடைத்திருப்பதால், சிங்கப்பூரர்கள் தங்களது 8ஆவது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கத் தேவையில்லை.
மொத்தம் 5 பேர் தகுதிச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்ததாகத் தேர்தல் துறை கூறியது.
அவர்களில் மூவர் மட்டுமே மலாய்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி, அதற்கான சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.
தகுதிச் சான்றிதழ் பெறாதவர்களின் பெயர்களையோ, அவர்களுக்கு ஏன் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதற்கான காரணத்தையோ அதிபர் தேர்தல் குழுவும், தேர்தல் துறையும் வெளியிடமாட்டா.
தகுதியுள்ள உத்தேச வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிடத் தயங்கக் கூடாது என்பதே நோக்கம்.
அரசமைப்புச் சட்டக் குழுவின் பரிந்துரைப்படி தகுதிச் சான்றிதழ் பெறாதவர்கள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கக்கூடாது.
இருப்பினும், சான்றிதழுக்கு விண்ணப்பித்து வெற்றிபெறாத ஒருவர், அவரின் தனிப்பட்ட விருப்பத்தின்படி, தம்மிடம் தெரிவிக்கப்பட்ட காரணத்தைப் பொதுமக்களுக்கு வெளியிடலாம்.
இவ்வேளையில், திருவாட்டி ஹலிமா யாக்கோப், சிங்கப்பூரர்களுக்குத் தம்மால் இயன்ற அளவு சிறப்பாய்ச் சேவையாற்றப்போவதாக உறுதியளித்துள்ளார்.
தேர்தல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதில் மாற்றமிருக்காது என்றார் அவர்.
அதிபர் தேர்தலுக்கான தகுதிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பிறகு திருவாட்டி ஹலிமா செய்தியாளர்களிடம் பேசினார்.