உயர்நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்
நீதித்துறை ஆணையாளர்கள் தியேன் பிக் யுவென் வெலரி (Thean Pik Yuen Valerie), ஹூ ஷியூ பெங் (Hoo Sheau Peng), டெபி ஓங் சியூ லிங் (Debbie Ong Siew Ling) ஏடிட் அப்துல்லா (Aedit Abdullah) ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர்: நீதித்துறை ஆணையாளர்கள் தியேன் பிக் யுவென் வெலரி (Thean Pik Yuen Valerie), ஹூ ஷியூ பெங் (Hoo Sheau Peng), டெபி ஓங் சியூ லிங் (Debbie Ong Siew Ling) ஏடிட் அப்துல்லா (Aedit Abdullah) ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் அலுவலகம் இன்று அந்தத் தகவலைத் தெரிவித்தது.
பிரதமர் லீ சியென் லூங்கின் ஆலோசனைப்படி அதிபர் டோனி டான் கெங் யாம் அவர்களை நியமித்தார். செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அந்த நியமனங்கள் நடப்புக்கு வரும்.
புதிய நியமனங்களையும் சேர்த்து, உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 22 ஆக உள்ளது. மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள 5 நீதிபதிகள், தலைமை நீதிபதி, 4 நீதித்துறை ஆணையாளர்கள், 5 மூத்த நீதிபதிகள், 12 அனைத்துலக நீதிபதிகள் ஆகியோர் அதில் அடங்குவர் என்று பிரதமர் அலுவலகம் கூறியது.