வேலையிடத்தில் ஊழியர் மரணம் - நிறுவனத்திற்கு $280,000 அபராதம்
வேலையிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதன் காரணமாக ஊழியர் ஒருவரின் மரணத்தை விளைவித்ததற்காக எஃகு பொறியியல் நிறுவனம் ஒன்றுக்கு $280,000 அபராதம் விதிக்கப்படுள்ளது.
வேலையிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதன் காரணமாக ஊழியர் ஒருவரின் மரணத்தை விளைவித்ததற்காக எஃகு பொறியியல் நிறுவனம் ஒன்றுக்கு $280,000 அபராதம் விதிக்கப்படுள்ளது.
செப்டம்பர் 2014இல் நடந்த விபத்தின் தொடர்பில், நேற்று ஸ்டெர்லிங் பொறியியல் நிறுவனம் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.
பார்ட்லி ரோட்டில் இருந்த கட்டுமானத் தளத்தில், உலோகக் கதவைப் பொருத்தும் போது விபத்து நேர்ந்தது. சுமார் 3 மீட்டர் உயரமும் 4.6 மீட்டர் அகலமும் கொண்ட அந்த வாயில் கதவைப் பொருத்தும் பணியில் ஐந்து ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
வாயில் கதவு ஒழுங்காக இயங்காததால், அதைச் சரிபார்க்கும்படி ஊழியர்கள் பணிக்கப்பட்டனர். கதவை அவர்கள் இழுத்த போது அது கவிழ்ந்து ஓர் ஊழியரின் மீது விழுந்தது.
சுமார் 1,500 கிலோகிராம் எடை கொண்ட வாயில் கதவின் கீழ் சிக்கிய ஊழியர் மாண்டார்.
கனமான வாயில் கதவால் ஏற்படக்கூடிய அபாயங்களை நிறுவனம் சரி பார்க்கவில்லை என்றும், வாயில் கதவு விழாமல் இருக்க தற்காலிகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அது மேற்கொள்ளவில்லை என்றும் மனிதவள அமைச்சு கூறியது.
வாயில் கதவைப் பொருத்தும் பணிகளுக்கு நிறுவனம் அனுமதி பெறவில்லை. அத்துடன், ஊழியர்களுக்குப் போதுமான மேற்பார்வையை அது வழங்கவில்லை. வாயில் கதவைப் பொருத்துவதில் உள்ள அபாயங்களையும் நிறுவனம் சரிவரக் கையாளவில்லை என்று கூறப்பட்டது.
வேலையிடத்தில் ஊழியர்களின் பாதுகாப்பு,நிறுவனங்களின் பொறுப்பு என்பதை வலியுறுத்த, பெரிதளவில் அபராதம் விதிப்பதற்குக் கேட்டுக்கொண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.