"மலாய் ஊழியரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் கவலைக்குரியது" : டாக்டர் மலிக்கி
சிங்கப்பூரில், வேலைக்காக வந்திருந்த மலாய் ஊழியரைச் சீன மாது ஒருவர் தமது வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் குறித்து டாக்டர் மலிக்கி கவலை தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில், வேலைக்காக வந்திருந்த மலாய் ஊழியரைச் சீன மாது ஒருவர் தமது வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் குறித்து டாக்டர் மலிக்கி கவலை தெரிவித்துள்ளார்.
சிக்லாப்பில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் நன்கொடை நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் மலிக்கி செய்தியாளர்களிடம் பேசினார். பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனத்தை அழைத்த சீன மாது, அதிலிருந்து வந்த மலாய் ஆடவரைப் பார்த்ததும் அவரை வீட்டுக்குள் விட மறுத்துத் திருப்பியனுப்பினார்.
பயங்கரவாதம் குறித்துத் தாம் அதிகம் கேள்விப்பட்டிருப்பதாகவும் தம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதாகவும் அந்த மாது கூறியிருக்கிறார். அந்தச் சம்பவம் குறித்து, அந்த ஊழியரின் முதலாளி மூலம் தமக்குத் தெரியவந்ததாகக் கூறினார் டாக்டர் மலிக்கி. அதுகுறித்துத் தாம் அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததாகக் கூறிய டாக்டர் மலிக்கி, ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதான அத்தகைய எண்ணம் ஆரோக்கியமானது அல்ல என்றார்.
அத்தகைய சம்பவங்கள் நடப்பது தெரியவந்தால், உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். தவறான கருத்துகளைச் சரிப்படுத்த அது உதவும் என்றார் அவர்.