கடல்சார் அறிவியல் - 7 ஆய்வுத் திட்டங்களுக்குக்கு உதவி
சிங்கப்பூரின் நீண்டகாலக் கடல்சார் அறிவியல் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் ஐந்தாண்டுத் திட்டத்தின் ஓர் அங்கமாக, 7 ஆய்வுத் திட்டங்களைத் தேசிய ஆய்வு அறநிறுவனம் வழங்கியுள்ளது.
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் நீண்டகாலக் கடல்சார் அறிவியல் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் ஐந்தாண்டுத் திட்டத்தின் ஓர் அங்கமாக, 7 ஆய்வுத் திட்டங்களைத் தேசிய ஆய்வு அறநிறுவனம் வழங்கியுள்ளது. சிங்கப்பூரில் பெருகிவரும் பாசிப் பிரச்சினையைக் கையாள்வது, பவளப் பாறைகளின் மீள்திறனை மேம்படுத்துவது, கடல்சார் பல்லுயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் கடற்சுவர்களை எழுப்புவது போன்ற அம்சங்களில் அந்தத் திட்டங்கள் கவனம் செலுத்தவிருக்கின்றன.
துணைப் பிரதமர் தியோச்சீ ஹியென், செயிண்ட் ஜான்ஸ் (St John's) தீவின் தேசியக் கடல்சார் ஆய்வகத்தின் திறப்பு விழாவில் திட்டங்கள் குறித்த விவரங்களை அறிவித்தார். சிங்கப்பூரில் உள்ள 200-உக்கும் மேற்பட்ட கடல்சார் அறிவியல் ஆய்வாளர்களுக்கு அந்த ஆய்வகம் சேவை வழங்கும்.
தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவருமான திரு தியோ, கடல்சார் சுற்றுச்சூழல் எதிர்நோக்கும் சவால்களைச் சுட்டினார். அதிகரித்துவரும் வெப்பநிலை, உயர்ந்துவரும் கடல் நீர்மட்டம் போன்றவற்றை அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் கடல் சூழலை மேம்படுத்துவதும் அதன் தொடர்பான அறிவியலை நன்கு புரிந்துகொள்வதும் சவால்களைக் கையாள்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று திரு தியோ வலியுறுத்தினார்.