பொதுப் போக்குவரத்துத் தடங்கல்கள் குறித்து மக்கள் விரக்தியடைந்துள்ளனர்-பிரதமர் லீ
அண்மையில் ஏற்பட்ட எம்ஆர்டி ரயில் சேவைத் தடைப் பிரச்சினைகளிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட எம்ஆர்டி ரயில் சேவைத் தடைப் பிரச்சினைகளிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.
பிரச்சினைகளுக்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும் என்றும் அப்போதுதான் அவற்றுக்குத் தீர்வுகாணமுடியும் என்றும் அவர் சொன்னார். பீஷான் நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளம், ஜூ கூன் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.
அத்தகைய சம்பவங்களால் சிங்கப்பூரர்கள் சலிப்படைந்திருப்பதாகக் கூறிய திரு லீ, மக்களின் ஆதங்கத்தைத் தம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.
ரயில் கட்டமைப்பின் நம்பகத்தன்மையில் முன்னேற்றத்தைக் கொண்டுவருவதென்பது மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினை.
எனினும் சேவையின் தரம் உயர்வாகவும் நிலையானதாகவும் இருக்கும் வகையில் அமைப்புகள் வலுப்படுத்தப்படவேண்டும் என்றார் பிரதமர். போக்குவரத்து அமைச்சரும் அவரின் குழுவினரும் அண்மைய சம்பவங்களால் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாகப் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
ரயில் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் முன்னேற்றத்தைக் காட்டத் தொடங்கினாலும் மக்கள் அவ்வாறு உணரவில்லை என்றார் அவர்.
போக்குவரத்து அமைச்சரின் பணி சவால் நிறைந்தது. அவருக்கும் அவரின் குழுவினருக்கும் தமது முழு ஆதரவு உள்ளது எனப் பிரதமர் லீ தெரிவித்தார்.
ரயில் கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் காலம் பிடிக்கும் என்றும் சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறைக்கு அதற்கான கால அவகாசத்தை அளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.