தகாத காணொளியைப் பதிவுசெய்த இளையரைப் பிடிக்க உதவிய கடற்படை அதிகாரிக்குப் பாராட்டு
அந்த நபரைப் பிடிப்பதற்கு உதவிய அதிகாரி ஓங்கிற்குக் காவல்துறைப் பாராட்டுக் கடிதம் வழங்கியது.
சிங்கப்பூர்க் கடற்படையைச் சேர்ந்த திரு சாமுவல் ஓங் அன்று வேலை முடிந்து வீடு திரும்புவதற்காகத் தனா மேரா ரயில் நிலையத்துக்குச் சென்றார்.
அங்குள்ள மின்படிக்கட்டுகளில், மாணவி ஒருவருக்கு மிக அருகில் ஓர் இளையர் நின்றுகொண்டிருப்பதைத் திரு ஓங் கவனித்தார்.
முதலில் அசாதாரணமாக ஒன்றும் தெரியவில்லை.
அவர்களைத் தாண்டிச் செல்லும்போதுதான், அந்த நபர் கைதொலைபேசியில் மாணவியைத் தகாத முறையில் படமெடுத்துக்கொண்டிருப்பதைத் திரு ஓங் பார்த்தார்.
அக்டோபர் மாதம் 31ஆம் தேதி அந்தச் சம்பவம் நடந்தது.
18 வயது இளையர் திரு ஓங்கிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.
இளையரின் கைதொலைபேசியில் தகாத காணொளிகள் இருந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
அந்த நபரைப் பிடிப்பதற்கு உதவிய அதிகாரி ஓங்கிற்குக் காவல்துறைப் பாராட்டுக் கடிதம் வழங்கியது.
விவேகமாகச் சிந்தித்துச் செயல்பட்டதற்காக அவரைப் பாராட்டுவதாகக் காவல்துறை ஃபேஸ்புக்கில் பதிவுசெய்திருந்தது.
உரிய நேரத்தில் முறையான செயலைச் செய்வதற்குத் தமது பயிற்சி உதவியதாகத் திரு ஓங் சொன்னார்.
என்ன நடக்கிறது என்று அறியாத பெண்ணுக்கு உதவியது தமது கடமை என்றார் அவர்.