சுகாதார அறிவியல் ஆணையம் ஸ்ரீ அம்பிகாஸ் ஓமத் தண்ணீருக்குத் தடை விதித்துள்ளது. அதை உட்கொண்ட 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவருக்கு நெஞ்செரிச்சல், தொண்டைப்புண், மூச்சுக் குழாய் வீக்கம் ஆகியவை ஏற்பட்டதாக மருத்துவர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின் அந்த ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அண்மையில் மருத்துவமனையிலிருந்துஅவர் வீடு திரும்பியிருக்கிறார்.
சம்பவத்தைத் தொடர்ந்து ஆணையத்தின் ஆய்வுக்கூடம் அந்த ஓமத் தண்ணீரைச் சோதனை செய்தது. அப்போது, அதில் காரத்தன்மை (Alkalinity) அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை நிர்ணயிக்கும் pH அளவு 13க்கும் அதிகமாய் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. (நடுநிலை அளவு - 7).
அமிலத்தன்மையோ, காரத்தன்மையோ அதிகம் கொண்ட பொருட்கள் திசுக்களைப் பொசுக்கிப் புண்களை ஏற்படுத்தும்.
அந்த ஓமத் தண்ணீரில் வேறு நச்சுப் பொருள் ஏதுமில்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது.
ஆனால், அதனைத் தொடர்ந்து ஆணையம் மேற்கொண்ட அடுத்தடுத்த சோதனைகளில் காரத்தன்மை அளவு நடுநிலையாகவே இருந்தது.
அதனால், ஆடவர் பாதிக்கப்பட்டதைத் தனிப்பட்ட சம்பவமாகப் பார்ப்பதாய் ஆணையம் தெரிவித்தது.
இருப்பினும், ஸ்ரீ அம்பிகாஸ் ஓமத்திரவம் விற்கும் கடைகளையும், அதன் விநியோகிப்பாளரையும் தொடர்பு கொண்ட ஆணையம், உடனடியாக அவற்றை அகற்றும்படி கேட்டுக்கொண்டது.