சிங்கப்பூர் மற்ற நாடுகளின் ஆதிக்கத்திற்கு உள்ளாகக்கூடாது - பிரதமர் லீ
சிங்கப்பூர் பல நாடுகளுடன் நட்பார்ந்த உறவைக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிவிடக்கூடாது என்றும் பிரதமர் லீ சியென் லூங் எச்சரித்துள்ளார்.
சிங்கப்பூர் பல நாடுகளுடன் நட்பார்ந்த உறவைக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிவிடக்கூடாது என்றும் பிரதமர் லீ சியென் லூங் எச்சரித்துள்ளார்.
சிங்கப்பூர் பிற நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவுமுறையில் தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படவேண்டும் என்றும், இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் அணுகுமுறையைக் கையாளவேண்டும் என்றும் அவர் கூறினார்.
பிற நாடுகளுடனான நல்லுறவை மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறிய பிரதமர், பிற நாடுகளின் ஆதிக்கத்திற்கு சிங்கப்பூர் உள்ளாகிவிடக்கூடாது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவு எப்போதுமே சிக்கல் மிகுந்ததாக இருக்கும் என்று கூறிய பிரதமர் லீ, அண்மையில் மலேசியாவுடன் பெட்ரா பிராங்கா தொடர்பில் ஏற்பட்ட விவகாரம் பற்றிக் கோடி காட்டினார்.
அந்த விவகாரத்தில் மலேசியாவின் நோக்கம் பற்றித் தெரியாத நிலையில், எதிர்வரும் மலேசியப் பொதுத் தேர்தலுக்கு அந்த விவகாரத்தில் ஒரு பங்கு இருக்கக்கூடும் என்று பிரதமர் கூறினார்.
இந்தோனேசியாவுடன் ஆகாய வெளி குறித்து எழுந்த பிரச்சனைகள் பற்றியும் பிரதமர் கருத்துரைத்தார்.
அவ்வப்போது பிரச்சனைகள் உருவான வேளையிலும் கூட, சிங்கப்பூர் அவ்விரு நாடுகளுடன் நல்லுறவைக் கட்டிக் காத்து வருவதாகப் பிரதமர் கூறினார்.
சீனா, அமெரிக்கா ஆகிய வல்லரசு நாடுகளுடனும் சிங்கப்பூர் நல்லுறவைக் கட்டிக் காத்து வருவதைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
மக்கள் செயல் கட்சியின் விருது, மாநாட்டு நிகழ்ச்சியில் சுமார் 2,000 பேர் முன்னிலையில் திரு.லீ உரையாற்றினார்.