லீ குவான் இயூவின் நினைவாக 300 ஓவியங்கள் - காட்சிக்கு
The Singapore Story" எனும் ஓவியக் கண்காட்சி சன்ட்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் இன்று தொடங்கியிருக்கிறது. அடுத்த மாத இறுதி வரை அது நீடிக்கும். சுமார் 300 ஓவியங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர்: "The Singapore Story" எனும் ஓவியக் கண்காட்சி சன்ட்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் இன்று தொடங்கியிருக்கிறது. அடுத்த மாத இறுதி வரை அது நீடிக்கும். சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு. லீ குவான் இயூவையும், சிங்கப்பூரின் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சுமார் 300 ஓவியங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அமரர் திரு. லீ யைச் சித்திரிக்கும் எண்பது ஓவியங்கள் அங்குள்ளன.
1978ல் அப்போதைய சீன அதிபர் திரு. டெங் சியாவ் பிங் இங்கு வந்த போது திரு. லீ அவரைச் சந்தித்தார். அவர்கள் கைகுலுக்கிக் கொண்ட சிலையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கலைப்படைப்புகள் மட்டுமல்ல, சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்காகத் திரு. லீ மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கைகள் பெரிய தொலைக்காட்சியில் திரையிடப்படுகின்றன. கலைப்படைப்புகளைச் சேகரித்து வரும் திரு. வின்சன்ட் சுவா கண்காட்சியை நடத்துகிறார்.
சிங்கப்பூர் 50 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தேசிய தினக் காலகட்டத்தின் போது கண்காட்சியை நடத்த அவர் முதலில் திட்டமிட்டிருந்தார். அமரர் திரு. லீக்கு அஞ்சலி செலுத்தவும் அவரது சாதனைகளை அங்கீகரிக்கவும் முன்னதாகவே ஓவியக் கண்காட்சியை நடத்துகிறார் திரு. சுவா. கண்காட்சிக்கு அனுமதி இலவசம். வருகையாளர்கள் திரு. லீ பற்றிய தங்கள் கருத்துகளையும் பதிவு செய்யலாம்.