மறைந்த திரு லீக்கு அஞ்சலி செலுத்தினார் இஸ்ரேலிய அதிபர்
இஸ்ரேலிய அதிபர் ரியுவ்வன் ரிவ்லின்(Reuven Rivlin), காலஞ்சென்ற திரு லீ குவான் இயூவுக்கு அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் வந்திருக்கிறார்.
சிங்கப்பூர்: இஸ்ரேலிய அதிபர் ரியுவ்வன் ரிவ்லின்(Reuven Rivlin), காலஞ்சென்ற திரு லீ குவான் இயூவுக்கு அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் வந்திருக்கிறார். நேற்று அவர் தமது இறுதி மரியாதையைச் செலுத்தினார். புனித பைபிலில் உள்ள வாசகம் ஒன்றை அவர், திரு லீக்குப் புகழாரமாகச் சூட்டினார். திரு லீ, இஸ்ரேலுக்கும், யூத மக்களுக்கும் அன்பான நண்பர் என்றார் அவர். திரு ரிவ்லினும், அமரர் திரு லீயின் இறுதிச் சடங்கில் நாளை கலந்துகொள்வதாகத் தெரிவித்தார். அதனைப் பெரும் பாக்கியமாகக் கருதுவதாய் அவர் சொன்னார். தமது இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டு உறவை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் அதிபர் ரிவ்லின் கூறினார். இதற்கு முன்பு இந்த வாரத்தில், இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹுவும், மறைந்த திரு லீக்குப் புகழாரம் சூட்டி, தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார். சொந்தநாட்டில் பெருமகனாக இருந்ததோடு மட்டுமல்லாமல், திரு லீ, அனைத்துலக அளவிலும் பிரபலமானவர் என்பதைத் திரு நெட்டன்யாஹு குறிப்பிட்டார்.