சமூகச் செலவுகளைவிட வர்த்தக ஆதரவு கூடுதல் கவனம் பெறலாம்
பொருளியல் மறுசீரமைப்பின் விளைவுகள் தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ள வேளையில் புதிய நிதியாண்டுக்கான வரவுச் செலவுத் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.
சிங்கப்பூர்: பொருளியல் மறுசீரமைப்பின் விளைவுகள் தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ள வேளையில் புதிய நிதியாண்டுக்கான வரவுச் செலவுத் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது. இன்னும் 2 நாட்களில் நிதியமைச்சர் திரு. ஹெங் சுவீ கியெட் அதனை அறிவிப்பார்.
பொருளாதார சிக்கல்களைச் சமாளிக்க, வர்த்தகங்களுக்கு உதவி தேவை; சிங்கப்பூரர்களுக்கு வேலைகள் தேவை. இவையே இப்போது அவசியம். இந்த அம்சங்களுக்கே, வரவு செலவுத்திட்டம் அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர், மூத்த நிதி ஆலோசகர்கள்.
பொருளியல் மெதுவடைந்து வருகிறது. இந்தச் சூழலில், தொடர்ந்து சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு, சிரமப்படும் நிறுவனங்களைக் கைதூக்கிவிடும் வகையில் வரவுசெலவுத் திட்டம் அமைந்திருக்கும் என்கிறார், மூத்த பொருளியல் நிபுணர் திரு. இர்வின் சியா.
கடந்த சில ஆண்டுகளாக சமூகச் செலவுகளுக்காக அதிகம் செலவிடப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை, வர்த்தக ஆதரவுத் திட்டங்கள் கூடுதல் கவனம் பெறக்கூடும். வர்த்தகங்களுக்கு ஆதரவளிப்பது என்பது சிங்கப்பூரர்களின் வேலைகளைப் பாதுகாப்பதே என்றார் திரு. இர்வின் சியா.எனவே, வர்த்தகச்செலவுகளைச் சமாளிக்கும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாமென நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்தாலும் வர்த்தகம் புரிவதற்கு, தொடர்ந்து பணம் கிடைப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இருப்பினும் புத்தாக்கம், அனைத்துலகத் தொழில் முனைப்பு போன்றவற்றுக்கு, தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டது.