"குடிநுழைவுக் கொள்கைகளைக் கடுமையாக்க வேண்டும்"
குடிநுழைவுக் கொள்கைகளைக் கடுமையாக்குமாறு சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் அரசாங்கத்தை வற்புறுத்தியுள்ளார்.
குடிநுழைவுக் கொள்கைகளைக் கடுமையாக்குமாறு சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் அரசாங்கத்தை வற்புறுத்தியுள்ளார்.
விரும்பத் தகாத சம்பவம் ஏதும் சிங்கப்பூரில் நடக்காமல் இருக்க அது அவசியம் என்றார் அவர்.
புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான டாக்டர் சீ, கடுமையற்ற குடிநுழைவுக் கொள்கை காரணமாகவே தீவிரவாதச் சிந்தனையுடைய தனிநபர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய முடிந்ததாகக் குறைகூறினார்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பங்களாதேஷ் ஊழியர்கள் 8 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அடுத்து டாக்டர் சீ அவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றைய தொகுதி உலாவின்போது டாக்டர் சீ செய்தியாளர்களிடம் பேசினார்.
பயங்கரவாதச் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட அந்த எட்டு ஊழியர்களும் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு அரசாங்கமே காரணம் என்றார் டாக்டர் சீ.
ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவில் வெளிநாட்டுப் போராளிகளாகச் சேர அவர்கள் எண்ணம் கொண்டிருந்தனர்.
தற்போது அவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்தச் சட்டம் அகற்றப்படவேண்டும் என டாக்டர் சீ பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தார்.
ஆளும் கட்சியினர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை அச்சுறுத்தும் கருவியாகப் பயன்படுத்துவதாக அவர் குறைகூறினார்.
அண்மையில் பாரிஸிலும், ஜக்கர்த்தாவிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்டம் நீக்கப்படவேண்டுமா எனச் செய்தியாளர்கள் டாக்டர் சீயிடம் கேட்டனர்.
குடியரசின் குடிநுழைவுக் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலமே பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் என்றார் அவர்.
சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டினரைத் தெரிவு செய்யும் முறையை மாற்றி அமைப்பதும் அதில் அடங்கும்.
அசம்பாவிதம் ஏதும் நேரும் முன்னர் அரசாங்கம் அதனைச் செய்யவேண்டுமென டாக்டர் சீ கேட்டுக்கொண்டார்.