வரவுசெலவுத் திட்டம் 2016: அடுத்த 50 ஆண்டுக்கான மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது
இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அடுத்த 50 ஆண்டுக்கான மாற்றங்களுக்கு வழிவகுப்பதாக நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அடுத்த 50 ஆண்டுக்கான மாற்றங்களுக்கு வழிவகுப்பதாக நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.
13-ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தின் முதல் வரவுசெலவுத் திட்டம்; நிதி அமைச்சர் Heng Swee Keat தாக்கல் செய்த முதல் வரவுசெலவுத் திட்டமும் இதுதான்.
அவற்றுடன் இந்த வரவுசெலவுத் திட்டம் உருமாற்றத்துக்கு அழைப்பு விடுப்பதால் முக்கியமானதாகிறது என்பதைத் திருவாட்டி Halimah வலியுறுத்தினார்.
வரவுசெலவுத் திட்டம் 2016-க்கான ஒதுக்கீட்டுக் குழு விவாதம் கடந்த இரண்டு வாரமாக இடம்பெற்றது.
அதனை நிறைவுசெய்து பேசினார் திருவாட்டி Halimah. இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை முதல்முறையாக வெளியிட்ட நிதியமைச்சர் Heng Swee Keat அதனை நேர்த்தியுடன் செய்ததாகத் திருவாட்டி ஹலிமா பாராட்டினார்.
நாடாளுமன்றத்தில் புதிதாகப் பதவியேற்ற பல உறுப்பினர்களுக்கும் இது முதல் வரவுசெலவுத் திட்டம் என்பதை அவர் சுட்டினார்.
சுதந்திரம் பெற்று 51-ஆவது ஆண்டில் அறிவிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் எதிர்காலத்தில் மாற்றத்துக்கு அழைப்பு விடுப்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதைத் திருவாட்டி Halimah நினைவுகூர்ந்தார்.
வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்பச் செயல்படுவதற்கு மாறவேண்டிய அவசியம் இருந்தால் மாறித்தான் ஆக வேண்டும் என்றார் அவர்.
அப்படி மாறும்போது, இடையில் சில தடைகள் வரும் என்று மன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டதைத் திருவாட்டி Halimah சுட்டினார்.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில்துறை மாற்றுத் திட்டங்கள் மன்றத்தில் வரவேற்கப்பட்டன.
ஊழியர்களின் பங்குக்கு அவர்களும் மாற வேண்டும், தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
எந்திரனியல் தாக்கத்தால் வேலை போய்விடுமோ என்ற கவலையும் மேலோங்கியிருந்தது.
நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த இரண்டு முக்கிய விவகாரங்களுக்கும் இம்முறை தீர்வு கிடைத்ததாகத் திரு Halimah சொன்னார்.
அவை, தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வுக்கான மதிப்பீட்டு முறை.
திருமணமாகாத அன்னையருக்கான மகப்பேற்று விடுப்பு.
பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை அந்த மாற்றம் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். முதியோருக்கான திட்டங்களின்வழி சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் மன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.
இந்த வரவுசெலவுத் திட்டத்தில் 22 புதிய திட்டங்கள் அறிமுகம் கண்டதாகத் திருவாட்டி Halimah தெரிவித்தார்.
ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு மன்ற உறுப்பினர்களுக்குத் திருவாட்டி Halimah நன்றி தெரிவித்துக்கொண்டார்.
உறுப்பினர்கள் சிலர் மனத்திலிருந்து பேசியதை அவர் நினைவுகூர்ந்தார். சாதாரண மக்களைப் பிரதிநிதிக்கும் மன்ற உறுப்பினர்கள், அவர்களின் வலிகள், அக்கறைகள், இன்பதுன்பங்கள், ஆர்வங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைச் சிந்திப்பதாகத் திருவாட்டி Halimah குறிப்பிட்டார்.
விவாதம் உயர்தரமாணது என்றும் அவர் சொன்னார். சிங்கப்பூரர்களில் பலர் அந்த விவாதத்தைத் தொடர்ந்து பார்க்காதது தமக்கு வருத்தமளிப்பதாகவும் திருவாட்டி Halimah தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்த பல தகவல்களை அதன்வழி பெறலாம் என அவர் வலியுறுத்தினார்.
அந்த விவகாரம் ஒரு சவாலாக அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இயன்ற அளவுக்கு முயற்சிகளை மேற்கொள்ளும்.
ஆனால் அதற்கு அப்பால், அவற்றை எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது அனைவரின் கைகளிலுமே உள்ளது என்றார் திருவாட்டி ஹலிமா.