முதியோருக்கான வீட்டு, பகல் நேரப் பராமரிப்புச் சேவைகளுக்கான இடங்கள் அதிகரிப்பு
2020ஆம் ஆண்டுக்குள் 10,000 வீட்டுப் பராமரிப்பு, 6,200 பகல் நேரப் பராமரிப்புச் சேவைகளுக்கான இடங்களை உருவாக்கும் இலக்கில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டுக்குள் 10,000 வீட்டுப் பராமரிப்பு, 6,200 பகல் நேரப் பராமரிப்புச் சேவைகளுக்கான இடங்களை உருவாக்கும் இலக்கில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சுக்கான மூத்த துணையமைச்சர் டாக்டர் ஏமி கோர் இன்று நாடாளுமன்றத்தில் அது குறித்து பேசினார்.
இல்லங்களிலும் நிலையங்களிலும் வழங்கப்படும் பராமரிப்புச் சேவைகள் பற்றி அமைச்சு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகச் சொன்னார் டாக்டர் கோர்.
முதியோர் தங்களுக்குத் தேவையான சேவைகளைத் தெரிவுசெய்வதில் அது கைகொடுக்கும் என்றார் அவர்.
கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த பராமரிப்புச் சேவை அமைப்புக்குச் சுமார் 8,500 முதியோருக்கு வீட்டுப் பராமரிப்புச் சேவை தேவை என்று கோரி பரிந்துரைகள் வந்தன.
அதோடு சுமார் 7,800 பேருக்குப் பகல் நேரப் பராமரிப்புச் சேவை தேவை என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
எந்தக் கோரிக்கையையும் அமைப்பு நிராகரிப்பதில்லை என்றார் டாக்டர் கோர்.
இல்லப் பராமரிப்புச் சேவையை நாடுவோர் காத்திருக்க வேண்டிய தேவையிருக்காது.
ஆனால் பகல் நேரப் பராமரிப்புக்குக் குறைந்தது 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
சில வட்டாரங்களில் தேவையைச் சமாளிக்க மனிதவளம் இல்லாததே அதற்குக் காரணம்.
அதோடு, மத்திய வட்டாரம், முதிர்ச்சியடைந்த வீடமைப்புப் பேட்டைகள் போன்றவற்றில் புதிய முதியோர் பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான இட வசதி இல்லாதையும் டாக்டர் கோர் சுட்டினார்.