ஆடல், பாடல், நட்பார்ந்த போட்டிகள் வழி தமிழ்மொழி கற்றல்
மாணவர்கள் தங்கள் எண்ணங்களைப் புத்தாக்கத்தோடு வெளிப்படுத்த மொழி கைகொடுக்க முடியும்.
மாணவர்கள் தங்கள் எண்ணங்களைப் புத்தாக்கத்தோடு வெளிப்படுத்த மொழி கைகொடுக்க முடியும்.
ஆடல், பாடல், நட்பார்ந்த போட்டிகள் வழியாகவும், மொழியைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை, முத்தமிழ் விழா போன்ற நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன.
கலாசார, சமூக, இளையர் துறை, வர்த்தகத் தொழில் துறை ஆகியவற்றுக்கான மூத்த துணை அமைச்சர் திருவாட்டி சிம் ஆன், முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டபோது, அந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 22ஆம் முத்தமிழ் விழா நேற்றிரவு அரங்கேறியது.
அதில் பாலர் பள்ளி, தொடக்கநிலை ஒன்று, இரண்டில் பயிலும் மாணவர்கள் மாறுவேடம் பூண்டு, வசனங்களை ஒப்பித்த அழகே தனி.
தொடக்கநிலை மாணவர்களுக்குத் திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.
உயர்நிலை மாணவர்கள் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்புப் போட்டியில் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டு முதன்முறையாக உயர்நிலை 3ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செய்தி எழுதும் போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இத்தகைய போட்டிகள், தங்கள் மொழி வளத்தைப் பெருகச் செய்வதாக மாணவர்கள் கூறினர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய், உள்ளூர் எழுத்தாளர் திரு. செ. ப. பன்னீர்செல்வத்துக்குத் 'தமிழவேள்' விருது வழங்கப்பட்டது.
திரு. பன்னீர்செல்வம் 1960இல் தமது தமிழ்ப் பணிகளைத் தொடங்கினார்.
43 ஆண்டுகள் சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றினார்.
ஒலி 96.8 செய்திப் பிரிவின் மூத்த செய்தியாளராகவும் அவர் பொறுப்புவகித்தார்.
தமிழ்த் துறைக்கு மேலும் பங்காற்ற இந்த விருது உந்துதலாய் அமைவதாகக் கூறினார் திரு. செ. ப. பன்னீர்செல்வம்.
உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று மகிழ்ந்தனர்.