கத்தாருடனான தொலைபேசி உரையாடலால் கோபமடைந்த சவுதி அரேபியா
இரு நாடுகளின் ஆட்சியுரிமை பாதிக்கப்படாத வகையில் சர்ச்சையைத் தீர்க்க இரு தூதர்களை நியமிக்கலாம் என சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் பரிந்துரைத்ததாகத் தகவல் வெளியானது.
கத்தார் தலைவருக்கும் சவுதி அரேபியப் பட்டத்து இளவரசருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு கத்தாருடனான கலந்துரையாடலை ரத்துசெய்வதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா, பஹ்ரேன், எகிப்து, ஐக்கிய அரபுச் சிற்றரசு ஆகியவற்றுக்கும் டோஹாவுக்கும் உள்ள உறவு கடந்த ஜூன் மாதம் துண்டிக்கப்பட்டது.
கத்தாருடனான நில, ஆகாய, கடல் வழி போக்குவரத்தை அந்நாடுகள் தடைசெய்தன.
கத்தார் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கிறது என நான்கு நாடுகளும் குறைகூறின. டோஹார் அந்தக் குற்றச்சாட்டினை மறுத்துவருகிறது.
நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இரு தரப்பினருடனும் தனித்தனியே பேசினார். அதனைத் தொடர்ந்து கத்தாரின் தலைவர் ஷேக் தமிமும் சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் முஹம்மது சல்மானும் சர்ச்சைக்கான தீர்வு குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடினர்.
நான்கு நாடுகளின் கோரிக்கைகளைக் கலந்து பேசவேண்டும் எனக் கத்தார் தலைவர் கூறியுள்ளார்.
இரு நாடுகளின் ஆட்சியுரிமை பாதிக்கப்படாத வகையில் சர்ச்சையைத் தீர்க்க இரு தூதர்களை நியமிக்கலாம் என சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் பரிந்துரைத்ததாகத் தகவல் வெளியானது.
எனினும் கத்தார் கலந்துரையாடலில் தீவிரம் காட்டவில்லை என்ற காரணத்தால் பேச்சு தற்காலிகமாக ரத்துசெய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.