குரங்கு தம்படம் எடுத்த வழக்கில் கேமரா உரிமையாளர் வெற்றி
குரங்கு ஒன்று தம்படம் (selfie) எடுத்துப் பிரபலமானதில், அந்தப் படத்தின் உரிமை குறித்து உருவான வழக்கில், கேமராவுக்குச் சொந்தக்காரரான திரு. டேவிட் ஸ்லாட்டர் வெற்றி பெற்றுள்ளார்.
குரங்கு ஒன்று தம்படம் (selfie) எடுத்துப் பிரபலமானதில், அந்தப் படத்தின் உரிமை குறித்து உருவான வழக்கில், கேமராவுக்குச் சொந்தக்காரரான திரு. டேவிட் ஸ்லாட்டர் வெற்றி பெற்றுள்ளார். திரு. ஸ்லாட்டரும், PETA என்னும் விலங்குநல உரிமைக் குழுவினரும் அந்த வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
திரு. ஸ்லாட்டர், 2011-இல் இந்தோனேசியாவின் சுலாவசித் தீவுக்குச் சென்றிருந்தபோது, அவருடைய கேமராவைப் பயன்படுத்திக் குரங்குகள் தம்படம் எடுத்துக் கொண்டன.
எதேச்சையாகத் தம்முடைய கேமராவில் பதிவான அந்தப் படங்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ஸ்லாட்டர் பின்னர் அவற்றை இணையத்தில் வெளியிட்டார்.
அதனையடுத்து, அந்தப் படத்தின் காப்புரிமை யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சை உருவானது. முன்னதாக, குரங்குகளுக்கு அந்தப் படத்தின் மீது காப்புரிமை இல்லையென, அமெரிக்க நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஆனால் குரங்கின் சார்பில், PETA அதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தது. ஆனால், சான் ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அதை நிராகரித்தது.
வழக்கில் தொடர்புடைய இருதரப்பினருமே விலங்குகளின் நன்மைக்காகப் பாடுபடுவதை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
குரங்குகளின் தம்படத்தில் இருந்து வருங்காலத்தில் கிடைக்கக்கூடிய வருமானத்தில் கால்வாசியை, பதிவுபெற்ற விலங்குநலக் குழுக்களுக்கு வழங்க திரு. ஸ்லாட்டர் ஒப்புக்கொண்டுள்ளார்.