அனைவருக்கும் சமமான புதிய இந்தியாவை உருவாக்கப் பிரதமர் மோடி அழைப்பு
நாட்டை முன்னேற்றம் காணச் செய்வதில் அனைவரும் உறுதியோடு செயல்பட வேண்டுமெனத் திரு. மோடி கேட்டுக்கொண்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின உரையில் புதிய இந்தியாவை உருவாக்கத் தமது குடிமக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்தியர்கள் அனைவரும் சமம் என்று குறிப்பிட்ட அவர், ஒன்றிணைந்து நாட்டில் சாதகமான மாற்றத்தை உருவாக்க வேண்டுமென்றார்.
நாட்டை முன்னேற்றம் காணச் செய்வதில் அனைவரும் உறுதியோடு செயல்பட வேண்டுமெனத் திரு. மோடி கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் 71ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
அதனையொட்டி தலைநகர் புதுடில்லியில் உள்ள செங்கோட்டையில், தேசியக் கொடியை ஏற்றி வைத்துத் திரு. மோடி உரையாற்றினார்.
இந்தியாவின் பாதுகாப்பு முக்கிய முன்னுரிமை பெற்றது என்றும், அதற்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து அது தன்னைத் தற்காத்துக்கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.
சீனாவுடன் புதிய எல்லைப் பூசல் உருவாகியுள்ள நிலையில் அவர் அதனைத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளுக்குக் கருணை காட்டப்பட மாட்டாது என்று குறிப்பிட்ட இந்தியப் பிரதமர், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் இந்தியாவுடன் ஒன்றுபட்டிருப்பதாகச் சொன்னார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றியும் திரு. மோடி பேசினார்.
அதன் மூலம் மூன்று இலட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
1.8 மில்லியன் பேர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததும் அந்த நடவடிக்கையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.