ரஷ்யா, ஈரான், வடகொரியா மீது புதிய தடைகள் - அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இணக்கம்
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயக கட்சியினரும், ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளின் மீது புதிய தடைகளை விதிப்பதன் தொடர்பில் இணக்கம் கண்டுள்ளனர். மாஸ்கோவுக்கு எதிரான தடைகளை அகற்றுவதற்கான அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முயற்சிகளை அந்த மசோதா பெரிதும் பாதிக்கும்.
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயக கட்சியினரும், ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளின் மீது புதிய தடைகளை விதிப்பதன் தொடர்பில் இணக்கம் கண்டுள்ளனர். மாஸ்கோவுக்கு எதிரான தடைகளை அகற்றுவதற்கான அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முயற்சிகளை அந்த மசோதா பெரிதும் பாதிக்கும்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள மசோதாவின்படி, ரஷ்யா தொடர்பிலான அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை, அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாஸ்கோவுக்கு எதிரான தடைகளைத் தளர்த்துவது. மேரிலாண்ட், நியூயார்க் மாநிலங்களில் அமைந்துள்ள தூதரக உடைமைகளை ரஷ்யாவிடம் திரும்ப ஒப்படைப்பது போன்ற நடவடிக்கைகள் அதில் அடங்கும்.
கடந்த ஆண்டு டிசம்பரில், தூதரகப் பகுதிகளில் இருந்து ரஷ்ய அதிகாரிகள் வெளியேறும்படி முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டிருந்தார்.
திரு. டிரம்ப் பரிந்துரைக்கும் மாற்றங்கள் தொடர்பில் குறைந்தது 30 நாட்கள் விவாதித்த பிறகு, அவற்றை ஏற்பதா, நிராகரிப்பதா என்பது குறித்து நாடாளுமன்றம் வாக்களிக்கும்.
ரஷ்யாவைத் திடமான முறையில் அதிபர் டிரம்ப் கையாளப் புதிய மசோதா வகை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு பற்றிய விரிவான விசாரணை தொடங்கியுள்ள நிலையில் புதிய மசோதா பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்பிலான வாக்கெடுப்பு, நாளை மறுநாள் அமெரிக்க மக்களவையில் நடைபெறும். ஒரு மாதம் முன்பே மசோதாவுக்கு செனட் அங்கீகாரம் கிடைத்தபோதும், மக்களவை அதற்கு ஆதரவளிக்கவில்லை.
வடகொரியாவுக்கு எதிரான தடைகளை அதில் சேர்க்க குடியரசுக் கட்சியினர் பரிந்துரைத்ததே அதற்குக் காரணம்.