மன்னன் டுடன்கமனின் அரும்பொருட்களைப் புதிய அரும்பொருளகத்துக்கு மாற்றும் பணி தொடக்கம்
கைரோ அரும்பொருளகத்திலுள்ள மன்னன் டுடன்கமனின் அரும்பொருட்களை, கீசா நகரில் உருவாகிவரும் புதிய அரும்பொருளகத்துக்கு மாற்றும் பணி தொடங்கியுள்ளது.
கைரோ, எகிப்து : கைரோ அரும்பொருளகத்திலுள்ள மன்னன் டுடன்கமனின் அரும்பொருட்களை, கீசா நகரில் உருவாகிவரும் புதிய அரும்பொருளகத்துக்கு மாற்றும் பணி தொடங்கியுள்ளது.
அதன் தொடக்கமாக நேற்று, தங்க முலாம் பூசப்பட்ட இரண்டு பொருட்கள், கிராண்ட் எகிப்திய அரும்பொருளகத்துக்கு மாற்றப்பட்டன.
பதின்ம வயதில் மாண்டுபோன மன்னனின் மரணச் சடங்குப் படுக்கையும், சிறு தேரும் நேற்றுப் பாதுகாப்பாக மாற்றப்பட்டன.
டுடன்கமன் கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள், புதிய அரும்பொருளகத்துக்கு மாற்றப்படவுள்ளன.
அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் அது திறக்கப்படவுள்ளது.
கைரோ அரும்பொருளகத்திலுள்ள அரும்பொருட்களில் ஆக முக்கியமானவை, டுடன்கமனின் அரும்பொருட்கள்.
அவற்றைப் பாதுகாப்பாகப் புதிய அரும்பொருளகத்துக்கு மாற்றுவது, மிகச் சிக்கலான பணி.
2014ஆம் ஆண்டில், டுடன்கமனின் தங்க முகக்கவசத்தில் இருந்த தாடிப் பகுதியை, ஊழியர் ஒருவர் சேதப்படுத்திவிட்டார்.
அது பொருத்தமற்ற பசையால் அவசர அவசரமாக ஒட்டி வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது.
பின்னர் உரிய நிபணர்களின் உதவியோடு தாடிப் பகுதி சீர்செய்யப்பட்டது.
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆட்சி செய்த மன்னன் டுடன்கமனின் கல்லறை, 1922 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.