450 மில்லியன் டாலருக்கு ஏலம் போன டா வின்சியின் ஓவியம்
இயேசுவின் ஓவியத்தை டா வின்சி 1505 ஆண்டுக்குப் பிறகு வரைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற ஓவியரான லியோனார்டோ டா வின்சியின் (Leonardo da Vinci) ஓவியம் ஒன்று, 450 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விலைபோயுள்ளது.
சுமார் 500 ஆண்டுக்கு முன்னர் வரையப்பட்ட அந்த ஓவியத்தின் பெயர் "Salvator Mundi" அதாவது, உலகை இரட்சிப்பவர்.
அந்த ஓவியத்தில் இயேசு கிறிஸ்து, ஒரு கையை உயர்த்தியபடியும் மறுகையில் ஸ்படிகத்தால் ஆன உலக உருண்டையையும் ஏந்தியபடி காணப்படுகிறார்.
இதுவரை ஏலத்தில் விற்பனையான ஆக அதிக விலையுள்ள ஓவியம் என அது கருதப்படுகிறது.
1519ஆம் ஆண்டில் டா வின்சி காலமானார்.
அவர் விட்டுச் சென்ற ஓவியப் படைப்புகளில் 20க்கும் குறைவானவையே தற்போது உள்ளன.
இயேசுவின் ஓவியத்தை டா வின்சி 1505 ஆண்டுக்குப் பிறகு வரைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஓவியத்தை வாங்கியவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
20 நிமிடங்கள் தொலைபேசியில் நடத்தப்பட்டது ஏலக்குத்தகை.
நியூ யார்க்கிலுள்ள கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம், முதலில் அந்த ஓவியத்துக்கான குறைந்தபட்ச ஏலத் தொகையாக 100 மில்லியன் டாலரை நிர்ணயித்திருந்தது.
1958இல் லண்டனில் ஒருமுறை அந்த ஓவியம் 60 டாலருக்கு விலைபோனது.