இந்தியாவில் பணமதிப்பு நீக்கம் - ஓராண்டு நிறைவு
இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 2 டிரில்லியன் டாலர். அதில் கறுப்புப் பணத்தின் புழக்கம் 60 விழுக்காடு என்று மதிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது.
கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரும் நோக்கில், சர்ச்சைக்குரிய அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
என்றாலும், அது இந்தியப் பொருளியலுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
2019 - 2020 நிதியாண்டில்தான் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சியைச் சீராக்க முடியும் என்று உலக வங்கி முன்னுரைத்துள்ளது.
நவம்பர் 8, 2016 அன்று உயர் மதிப்பிலான 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாக மாட்டா என்று அறிவித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
ஒரே இரவில் புழக்கத்திலிருந்த 86 விழுக்காட்டு ரூபாய் நோட்டுகள் திடீரென மதிப்பிழந்தன.
அதைத் தொடர்ந்து நாட்டில் பலவிதமான குழப்பம்.
மக்களிடையே பரிதவிப்பு.
சொற்பத் தொகைக்காக வங்கிகளின் வாசல்களில் இராப்பகலாய்க் காத்திருக்க வேண்டிய கட்டாயம்.
கையில் காசு புழங்காததால் சிலர் மாண்டுபோயினர்.
வர்த்தகங்கள் முடங்கிப் போயின.
விளைவுகளைத் தீர்க்கமாக ஆராயாமல் அரசாங்கம் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டது என்கின்றனர் சில நிபுணர்கள்.
பண மதிப்பு நீக்கம் கறுப்புப் பணத்தை முற்றாக ஒழிக்கவில்லை என்று இந்திய மத்திய வங்கியே ஒப்புக்கொண்டது.
இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 2 டிரில்லியன் டாலர்.
அதில் கறுப்புப் பணத்தின் புழக்கம் 60 விழுக்காடு என்று மதிப்பிடப்படுகிறது.
ஆனால், பண மதிப்பு நீக்கம் ஊழலற்ற பொருளியலைப் பிறக்கச் செய்திருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.