1MDB: "மத்திய வங்கியின் மூத்த அதிகாரிகளை விசாரிக்கவில்லை"
மலேசியாவின் மத்திய வங்கியின் மூத்த அதிகாரிகள் மூவர் விசாரிக்கப்பட்டு வருவதாக வெளியான தகவலை அந்நாட்டுத் தலைமை போலீஸ் அதிகாரி மறுத்துள்ளார்.
கோலாலம்பூர், மலேசியா. மலேசியாவின் மத்திய வங்கி, Bank Negara Malaysia.
கோலாலம்பூர், மலேசியா: மலேசியாவின் மத்திய வங்கியின் மூத்த அதிகாரிகள் மூவர் விசாரிக்கப்பட்டு வருவதாக வெளியான தகவலை அந்நாட்டுத் தலைமை போலீஸ் அதிகாரி மறுத்துள்ளார். 1MDB திட்டத்தின் தொடர்பில் பாதுகாப்பான முக்கியத் தகவலை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சஞ்சிகையிடம் அவர்கள் வெளியிட்ட சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டது. அவை ஆதாரமற்றவை என்று கூறிய மத்திய வங்கி, அந்தச் சம்பவத்தின் தொடர்பில் போலீசாரிடம் புகார் செய்திருப்பதாகச் சொன்னது.
Malaysia-Today என்ற சுயேட்சை இணையத்தளத்தை நிர்வகிக்கும் திரு Raja Petra Kamarudin, அந்த வங்கியின் 3 மூத்த அதிகாரிகளைச் சிறப்புப் பணிக் குழுவினர் விசாரித்து வருவதாகக் குறிப்பிட்டு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாகப் பார்ப்பதாய்ப் போலீஸ் தலைமை அதிகாரி காலித் அபு பாக்கார் (Khalid Abu Bakar) கூறியிருக்கிறார். அந்த வழக்கின் தொடர்பில் விசாரணை இன்னமும் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவர் சுட்டினார்.