Skip to main content
"பொருளியல், விலைவாசி, சமத்துவம்" மலேசியப் பிரதமராக 100 நாள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா exclusive

"பொருளியல், விலைவாசி, சமத்துவம்" மலேசியப் பிரதமராக 100 நாள் - திரு அன்வார் எதிர்நோக்கும் சவால்கள்

வாசிப்புநேரம் -
திரு அன்வார் இப்ராஹிம் மலேசியாவின் 10ஆவது பிரதமராகப் பொறுப்பேற்று 100 நாள்கள் ஆகவிருக்கிறது..

அரசாங்கத்தின் செயல்திட்டங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன...இருப்பினும், அசைக்க முடியாத செல்வாக்குடன் பிரதமர் அன்வார் செயலாற்றுகிறார் என்பது பலரின் கருத்து.
Related article image
படம்: மூத்த பத்திரிகையாளர் கே. பத்மநாதன்
பொருளியல் நிபுணத்துவம் கொண்ட தலைவராகத் திரு. அன்வார் இருப்பதால் ஒவ்வொரு மலேசியப் பிரதமருக்கும் அளிக்கப்படும் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்வதோடு பொருளியல் நிலையில் நாட்டை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்வார் என்ற நம்பிக்கை உண்டு என்கிறார் மூத்த பத்திரிகையாளர் கே. பத்மநாதன்.

100 நாள்களில் திரு அன்வார் பல செயல்திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார்.

மடானி மலேசியா செயல் திட்டம் மலேசியர்களுக்கானது என்றும் அது மலேசிய அரசியலின் புதிய தொடக்கம் என்றும் திரு பத்மநாதன் புகழாரம் சூட்டினார்.

"நாட்டின் நிர்வாக முறையை முழுமையாக அறிந்தவர் திரு அன்வார். அவரால் மட்டுமே இது சாத்தியமாகும்."

என்றார் அவர்.
Related article image
படம்: அரசியல் கவனிப்பாளர், வழக்கறிஞர் முருகேசன்
முன்பு அரசியலில் திரு. அன்வார் ஏராளமான இன்னல்களைச் சந்தித்தார். அனைத்தையும் கடந்து இன்று தலைமைத்துவப் பொறுப்பில் இருக்கிறார்.

இப்போதுகூட அவரைப் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அனைத்தையும் தமக்குச் சாதகமாக்கி வெற்றிபெறுவார் என்கிறார் அரசியல் கவனிப்பாளர், வழக்கறிஞர் முருகேசன்.

"2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் திரு. அன்வாரின் மிகச்சிறந்த தொடக்கமாகக் கருதப்படுகிறது"

"குறிப்பாக இளைஞர்கள், வசதி குறைந்தவர்கள், வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்கள் ஆகியோருக்குப் பொருத்தமான ஒன்றாக அது உள்ளது," என்றார் அவர்.

இனரீதியான பிரிவு இல்லாமல் மலேசியர்களை ஒரே மக்களாக அணுகும் திரு. அன்வாரின் நடவடிக்கைகள் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதற்கு வழிவகுக்கின்றன.

அவற்றைத் திறம்படச் சமாளிப்பதில் அவர் வெற்றி பெறுவார் என்று அரசியல் கவனிப்பாளர்கள் நம்புகின்றனர்.

கல்விக்காக 56 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மொழி சார்ந்த பள்ளிகளுக்குத் தனியாக மானியம் அறிவிக்கப்படவில்லை.

இதனால் தமிழ்ப்பள்ளிகளுக்கும் சீனப்பள்ளிகளுக்கும் நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது எனத் திரு. முருகேசன் குறிப்பிட்டார்.

அவரது ஆட்சியில் அனைத்து இனங்களுக்கான உரிமைகள் நிலைநிறுத்தப்படும் என்பதில் திரு. அன்வார் உறுதியாக இருந்தால், அனைத்தையும் சாத்தியப்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.

விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் திரு. அன்வாரின் அரசாங்கம் சிரமத்தை எதிர்நோக்குகிறது.

அரசாங்கம் விவசாய உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, விலை உயர்வைத் தடுக்கவேண்டும். இல்லையென்றால் மக்கள் கோபமடைவார்கள் என்பதையும் திரு. முருகேசன் சுட்டினார்.

மக்களின் மகத்தான ஆதரவோடு பிரதமராகப் பொறுப்பேற்றவர் திரு. அன்வார்; சில சவால்களை எதிர்கொள்ள அவருக்கு இன்னும் சற்று கால அவகாசம் வேண்டும் என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

மலேசியாவின் புதிய அடையாளத்திற்காக உழைக்கும் அவரது இலக்கு ஈடேறும் என்ற நம்பிக்கையில் மலேசிய மக்கள் இருக்கின்றனர்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்