'மியன்மாரில் உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளன'
'மியன்மாரில் உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளன'
மியன்மாரில் உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளதாகக் கம்போடியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, மியன்மார், நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.
நிலைமையை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது ஆசியானுக்கு இவ்வாண்டு தலைமை தாங்கும் கம்போடியா. அதன் பிரதமர் ஹுன் சென் (Hun Sen) நாளை மறுநாள் மியன்மார் செல்லவிருக்கிறார்.
இருப்பினும் அங்கு நிலைமை மோசமாய் இருப்பதாகக் கம்போடிய வெளியுறவு அமைச்சர் பிராக் சோக்கோன் (Prak Sokhonn) கூறினார்.
"மியன்மாரில் அரசியல், பாதுகாப்பு நெருக்கடி மோசமடைந்துவருகிறது. அதனால் பொருளியல், சுகாதார, மனிதாபிமான பிரச்சினைகள் நிலவுகின்றன. உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான அனைத்து அம்சங்களும் அங்குள்ளதாக எண்ணுகிறோம்," என்று அவர் சொன்னார்.
வட்டார நிலைத்தன்மை, ஆசியானின் நம்பகத்தன்மை,
ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீது மியன்மார்-நெருக்கடி, தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் திரு. பிராக் சோக்கோன் கூறினார்.
இருப்பினும் மியன்மார் ராணுவத் தலைவர் மின் ஆங் லைன் (Min Aung Hlaing) ஆசியான் சந்திப்புகளில் கலந்துகொள்வதற்கு அனுமதியளிக்கக் கம்போடியா முயற்சி எடுத்துவருவதாகக் கூறப்பட்டது.
- AFP/dv