கம்போடியப் பிரதமர் மியன்மாருக்குச் சென்றது குறித்து சில தென்கிழக்காசிய நாடுகள் கவலை : மலேசிய வெளியுறவு அமைச்சர்
கம்போடியப் பிரதமர் ஹுன் சென் (Hun Sen), கடந்த வாரம் மியன்மாருக்குச் சென்றது குறித்துத் தென்கிழக்காசிய நாடுகள் சில, அக்கறை தெரிவித்துள்ளதாக, மலேசிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவரது பயணம், மியன்மார் ராணுவ அரசாங்கத்தை அங்கீகரிப்பதாகப் பார்க்கப்படலாம் என அவை கவலை தெரிவித்தன.
ஆசியான் அமைப்புக்குத் தற்போது கம்போடியா தலைமைப் பொறுப்பேற்றுள்ளதை அவர்கள் சுட்டினர்.
கம்போடியப் பிரதமர் ஹுன் சென், கடந்த வாரம் மியன்மார் ராணுவத் தலைவர் மின் ஓங் லாய்னைச் (Min Ong Hlaing) சந்தித்துப் பேசினார்.
மியன்மார் நெருக்கடி குறித்து, தென் கிழக்காசிய நாடுகள் ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டுமென, ஐக்கிய நாட்டு நிறுவனம் கேட்டுக்கொண்டது.
நிறுவனத்தின் சிறப்புத் தூதர் நோலீன் ஹெய்சர் (Noeleen Heyzer), திரு. ஹுன் சென்னைக் காணொளி வழியாகச் சந்தித்தார்.
மியன்மாரில் நடக்கும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும், ஆசியான் பரிந்துரைத்த ஐந்து-அம்ச அமைதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் திருவாட்டி ஹெய்சர் அழைப்பு விடுத்தார்.
மியன்மாரில் தொடரும் நெருக்கடியால் குறைந்தது 1,500 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.