மலேசியாவின் பாராம் தொகுதியில் சரவாக் கட்சிகள் கூட்டணி வெற்றி
மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் பாராம் (Baram) தொகுதியில் சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)அதன் 23ஆவது நாடாளுமன்ற இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
அதன் வேட்பாளர் ஆன்யி இங்யாவ் (Anyi Ngau) 18,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தர். அடுத்து வந்த பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் ரோலண்ட் எங்கனைவிட ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அவருக்குக் கிடைத்தன. அந்தத் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சொற்ப வாக்குகளையே பெற்றார்.
தேர்தல் அன்று ஏற்பட்ட கனத்த மழையால் பாராம் தொகுதியில் உள்ள 12 வாக்களிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் நேற்று (21 நவம்பர்) அவற்றை மீண்டும் திறந்திருந்தது.
இந்நிலையில், மலேசியப் பொதுத் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த கூட்டணிகள், புதிய அரசாங்கத்தை அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறுவதற்குரிய காலக்கெடு இன்று (22 நவம்பர்) பிற்பகல் 2 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய காலக்கெடுக்குள் கூட்டணிகள் தங்களை ஆதரிக்கும் உறுப்பினர்களின் பெயர்களையும் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்படுபவரின் பெயரையும் தெரிவிக்குமாறு மாமன்னர் சுல்தான் அப்துல்லா கூறியுள்ளார்.