வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கேயே தூங்கிய ஆடவர்
மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கொள்ளை அடிக்கச் சென்ற வீட்டிலேயே ஓர் ஆடவர் தூங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் நேற்று (23 ஜனவரி) ஜெம்பொல் மாவட்டத்தில் நடந்தது.
ஒருமாடி கொண்ட வீட்டில் வசித்தவர்கள் காலையில் கண்விழித்தபோது சந்தேக நபரும் அங்கு உறங்கிக்கொண்டிருந்ததைக் கண்டதாக Bernama செய்தி நிறுவனம் சொன்னது.
41 வயது ஆடவர் திறந்திருந்த பின் கதவு வழியாக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
வீட்டில் இருந்த மதுவை குடித்த பிறகு அவர் உறங்கிவிட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஆடவருக்கு அருகே கண்டெடுக்கப்பட்ட பையில் 2 கத்திகள், திருப்புளி, மதுப் போத்தல்கள் உள்ளிட்ட பொருள்கள் இருந்ததாகக் கூறப்பட்டது.
சந்தேக ஆடவர் போதைப் பொருள் குற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-Bernama