சீனாவிலிருந்து வரும் பயணிகள்மீது பயணக் கட்டுப்பாடுகள் - 'பதிலடி கொடுக்கத் தயார்'
சீனாவிலிருந்து வரும் பயணிகள்மீது உலக நாடுகள் விதித்திருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனத் தோன்றுவதாய் சீன அரசாங்கம் கூறியுள்ளது.
அதற்குப் பதிலடி கொடுக்கவும் தயாராக இருப்பதாய் அது எச்சரிக்கை விடுத்தது.
சீனாவிலிருந்து செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கிருமித்தொற்றுப் பரிசோதனையைக் கட்டாயமாக்கியுள்ளன.
சீனா அதன் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதை அடுத்து அண்மையில் அங்குக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர், மாண்டோர் குறித்த உண்மையான எண்ணிக்கையைச் சீன அதிகாரிகள் வெளியிடவில்லை என்று அஞ்சப்படுகிறது.
அங்கு 5,000க்கும் குறைவானோரிடம் தொற்று கண்டறியப்பட்டதாகத் கடந்த மாதம் 24ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது என BBC குறிப்பிட்டது.
இருப்பினும், அன்றாடம் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டிவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உண்மையான எண்ணிக்கையை உலக நாடுகளுடன் பகிரும்படி சீனாவை உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டது.
தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற சீன வெளியறவு அமைச்சு, அரசியல் ஆதாயங்களுக்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்தது.