மோசமாகிவரும் சீனாவின் பொருளியல் மந்தநிலை - புத்துயிரூட்ட சீனப் பிரதமர் உறுதி
சீனப் பொருளியலுக்குப் புத்துயிரூட்ட அந்நாட்டுப் பிரதமர் லி கச்சியாங் (Li Keqiang) சூளுரைத்திருக்கிறார்.
நிலையான விலைகள், வேலைகள், பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றுக்குக் கொள்கை அளவில் ஆதரவை முடுக்கிவிட அவர் உறுதியளித்தார்.
சீனாவின் பொருளியல் மந்தநிலை மோசமாகிவருவதாக அண்மைத் தகவல்கள் காட்டியதை அடுத்து அவர் அவ்வாறு தெரிவித்தார்.
பொருளியல் நடவடிக்கைகளின் வேகம் குறையக்கூடாது என்று திரு. லீ குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளியல் மீட்சியை வலுப்படுத்த விரைந்து செயல்படவேண்டும் என்று அவர் சொன்னார்.
சீனாவின் பொருளியலுக்கு 40 விழுக்காடு பங்கு வகிக்கும் 6 மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய உள்ளூர் அதிகாரிகளைத் திரு. லீ சந்தித்தார்.
பொருளியல் நிலையாக இருக்க, வளர்ச்சி நடவடிக்கைகளை முடுக்கிவிடும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
கடன்பத்திர வெளியீடுகளின் மூலம் பயனீட்டை அதிகரிப்பது, முதலீடுகளை விரிவுபடுத்துவது அதில் அடங்கும்.
சீனாவின் பொருளியல் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட இன்னும் கூடுதலான நெருக்கடிக்கு உள்ளானதைத் திரு.லீ சுட்டினார்.
திங்கட்கிழமை (15 ஆகஸ்ட்) வெளியான அதிகாரபூர்வத் தகவல்களின் படி, சீனாவின் வாடிக்கையாளர், தொழில்துறை நடவடிக்கைகள் மோசமாகச் செயல்படுவதாகக் காட்டியிருந்தன.