ஹாங்காங்: கடையில் பொம்மையை மகன் உடைத்ததாக எண்ணி $5,800 வெள்ளி கட்டிய பெற்றோர்... சிறுவனின் தவறில்லை என்றறிந்து பணத்தைத் திருப்பிக்கொடுத்த கடை
ஹாங்காங்கில் விளையாட்டுப் பொருள்கள் விற்கும் கடையில் வைக்கப்பட்டிருந்த 1.8 மீட்டர் உயரமுள்ள Teletubby பொம்மையை ஒரு சிறுவன் தவறுதலாகத் தட்டிவிட்டதாகக் கூறினர் அந்தக் கடையின் ஊழியர்கள்.
உடைந்துபோன பொம்மைச் சிலைக்கு 5,800 வெள்ளி செலுத்தியாக வேண்டும் எனக் கடையின் நிர்வாகி கேட்டுள்ளார்.
பொம்மை விற்கப்படும் விலையோ 9,233 வெள்ளி.
அவர்களின் மகன் அந்தப் பொம்மையை உதைத்ததால்தான் அது கீழே விழுந்ததாகக் கடை ஊழியர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
மகன் மீதுதான் தவறு என்ற நினைத்துத் தொகையைச் செலுத்த ஒப்புக்கொண்டனர் பெற்றோர்.
ஆனால் அந்தச் சம்பவம் குறித்த காணொளி வெளியான பின்புதான் அந்தச் சிறுவன் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக ஒதுங்கியதும் அப்போது பின்னால் இருந்த அந்தப் பொம்மை கீழே விழுந்து நொறுங்கியதும் தெரியவந்தது.
அந்தக் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.
இணையவாசிகளின் குறைகூறல்களுக்கு உள்ளான அந்தக் கடை மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக SCMP செய்தி நிறுவனம் கூறியது.
சிறுவனின் பெற்றோரிடம் பணத்தையும் அது திருப்பிக் கொடுத்தது.