இந்திய நகரங்களில் COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது
இந்தியாவின் புதுடில்லியிலும் மும்பை நகரிலும் கடந்த இரு நாள்களில் கோவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலோர் வீட்டிலேயே குணமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
மும்பையில் நேற்று (16 ஜனவரி) முதல்முறையாக தினசரி நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 10,000க்கும் கீழ் பதிவானது.
ஜனவரி 7ஆம் தேதியன்று அந்த எண்ணிக்கை, முன்னெப்போதும் இல்லாத அளவில் 20,971 ஆக இருந்தது.
நேற்று அங்கு 7,895 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
தலைநகர் புதுடில்லியில் நோய்த்தொற்றுச் சம்பவங்கள், தொடர்ந்து குறைந்து வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஜனவரி 13 அன்று ஆக அதிகமாக, 28,867 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று (17 ஜனவரி) அந்த எண்ணிக்கை 15,000க்கும் குறைவாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பலருக்கும் ஏற்கெனவே ஒருமுறை கிருமித்தொற்று நேர்ந்ததோடு அதிகமானோர் தடுப்பூசி போட்டுமுடித்துள்ளனர்.
அதன் காரணமாகவே, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் விகிதமும் மாண்டுபோவோர் எண்ணிக்கையும் இம்முறை குறைவாய் இருப்பதாகத் தொற்றுநோய் நிபுணர்கள் நம்புகின்றனர்.