இந்தோனேசிய இல்லப் பணிப்பெண்களைப் பாதுகாக்கப் பரிந்துரைக்கப்படும் புதிய சட்டத்திற்குச் சிங்கப்பூர் முகவர்கள் வரவேற்பு...
இந்தோனேசிய இல்லப்பணிப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் பரிந்துரைக்கப்பட்ட புதிய சட்டத்தைச் சிங்கப்பூர் முகவர்கள் வரவேற்கின்றனர்.
PPRT என்பது இந்தோனேசியா முன்வைத்த மசோதாவின் பெயர்.
மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தோனேசியப் பணிப்பெண்களுக்கு ஒரே அளவில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படவேண்டியிருக்கும்.
துன்புறுத்தல் சம்பவங்களிலிருந்து பாதுகாப்பது உள்ளிட்ட வேறு பல அனுகூலங்களையும் பணிப்பெண்கள் எதிர்பார்க்கலாம்.
இத்தகைய மாற்றங்கள் முதன்முதலில் 19 ஆண்டுக்குமுன் பரிந்துரைக்கப்பட்டன.
அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது இந்தோனேசிய அரசாங்கம்.
இது ஒரு நல்ல மாற்றம் என்கின்றனர் இங்குள்ள முகவர்கள் சிலர்.
என்றாலும் பணிப்பெண்களின் வேலைச்சூழலை மேலும் இனிதாக்க இன்னும் அதிகம் செய்யலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
மசோதா நடப்புக்கு வந்தால் பணிப்பெண்களை வரவழைப்பதில் கூடுதல் நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படுமோ என்பது சிலரின் சந்தேகம்.
புதிய மாற்றங்கள் நியாயமாய் இருப்பது அவசியம்.
நல்ல முதலாளிகளைப் பாதிக்கும் வகையிலும் இருக்கக்கூடாது.
அதேநேரம் உதவி தேவைப்படும் பணிப்பெண்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நடுநிலையாகவும் அமையவேண்டும் என்று பணிப்பெண்கள் பலர் விரும்புகின்றனர்.