கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியது - 16 சிங்கப்பூரர்கள் காயம்
மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நேர்ந்த பேருந்து விபத்தில் 16 பேர் காயமுற்றனர்.
அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள் என்று Bernama செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
விபத்து இன்று (28 நவம்பர்) அதிகாலை 4 மணி அளவில் ஜாசினுக்கு (Jasin) அருகே நடந்தது.
கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தில் 27 பயணிகள் இருந்தனர்.
42 வயது ஓட்டுநர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து முன்னால் இருந்த டிரெய்லர் வாகனத்தின் மீது பேருந்து மோதியது.
டிரெய்லர் வாகனம் மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்களை ஏற்றியிருந்தது.
16 பேருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்களுக்கு உடனடிக் கவனிப்பு வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் Bernama-விடம் கூறினர்.
-Bernama