Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா exclusive

மலேசியாவில் கடலில் மூழ்கி மாண்ட 3 மகள்கள்... 'காப்பாற்ற முடியவில்லையே’- பரிதவிக்கும் தாய்... விசாரிக்கும் அதிகாரிகள்

வாசிப்புநேரம் -
சென்ற சனிக்கிழமை (22 ஏப்ரல்) நோன்புப் பெருநாளன்று மலேசியாவில் கடற்கரைக்குக் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் மாண்டனர்.

அந்தச் சம்பவம் போர்ட் டிக்சன் பந்தாய் சஹாயாவில் (Pantai Cahaya) நடந்தது.

கடந்த 4 நாள்களாக அவர்களின் புகைப்படத்தையும் காணொளியையும் சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்து இரங்கல் தெரிவிக்கின்றனர்.

கடலுக்குக் குளிக்கச் சென்ற பிள்ளைகள் தமது கண்ணெதிரே அலையில் அடித்துச் செல்வதைப் பார்த்தும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என அவர்களின் தாயார் கே. அஞ்சலை கண்ணீர் மல்கக் கூறினார்.
Related article image
(படம்: Thayalan Shanmugam)
"மகிழ்ச்சியாக இருக்கக் கடற்கரைக்குச் சென்றோம். அந்தக் கடலோடு என் மகிழ்ச்சியும் சென்றுவிட்டது. அந்தச் சம்பவம் என் மனத்தை இடி போல் தாக்கியுள்ளது"

என்றார் அவர்.

"என் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள் எனக் கதறினேன். அங்கிருந்தவர்கள் உதவிசெய்யக் கடலில் குதித்தும் பலன் இல்லை."

"சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு எனது பிள்ளைகளைப் பிணமாகக் கரை ஏற்றியபோது, அக்கணமே நானும் இறந்துவிடலாம் எனத் தோன்றியது"

என்றார் அஞ்சலை.

விழியோரத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு,

"என் மூத்த மகளான கலைவாணிக்கு இவ்வாண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவுசெய்திருந்தோம். நிச்சயத்திற்கான வேலைகளைக் கவனிப்பதற்காகவும் குடும்பத்தாருடன் இருக்கவும் இங்கு வந்தார். இப்போது ஒரேயடியாக எங்களை விட்டுப் போய்விட்டாள்" என அஞ்சலை 'செய்தி'யிடம் கூறினார்.

நீச்சல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்ட பகுதியில் இவர்கள் இறங்கியதுதான் இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெலுக் கெமாங் தீயணைப்பு மீட்புப் படைத் தலைவர் அசிஸி அலிஸ் கூறியிருந்தார்.

"கடந்த ஞாயிற்றுக்கிழமை (23 ஏப்ரல்) மாலை 5.57 மணியளவில் பொதுமக்கள் எங்களுக்குத் தகவல் கொடுத்தார்கள். உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றோம். கடற்கரையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. அது நீச்சல் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்ட பகுதி என்று தகவல் கிடைத்தது" என அசிஸி அலிஸ் கூறினார்.

அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் குளிப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தீயணைப்பு மீட்பு படையினர், பொதுமக்களின் உதவியோடு வீரன், சதீஸ்வரன் எனும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்