கோலாலம்பூரில் நடந்த போராட்டம் அசம்பாவிதமின்றி முடிவுற்றது
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த போராட்டம், எந்த அசம்பாவிதமும் இல்லாமல் முடிவுற்றது.
ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கிக்கு (Azam Baki) எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தப்பட்டது.
அதனால் நகரின் பெரும்பாலான பகுதி போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது.
பங்குச் சந்தை சர்ச்சையில் சிக்கியுள்ள அஸாம் பாக்கி உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.
மேலும் ஊழல் ஒழிப்பு ஆணையம், நாடாளுமன்றத்தின் பார்வையின்கீழ் வரவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
ரயில் நிலையத்தில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் சாலைச் சந்திப்புக்குச் சென்றனர்.
ஆனால் அவர்களை மேலும் முன்னேறவிடாமல் காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
கலகத் தடுப்புப் படையின் ஆதரவுடன் அதிகாரிகள் சாலைச் சந்திப்பில் மனிதத் தடுப்பை உருவாக்கினர்.
தண்ணீர் பீச்சும் குழாய்களை அதிகாரிகள் ஏந்தியிருந்ததாகக் கூறப்பட்டது.
COVID-19 விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் சுமார் ஆயிரம் சட்ட அமலாக்க அதிகாரிகள் களம் இறங்கினர்.
போராட்டத்தால் போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ரயில் நிலையங்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.