நஜிப் மேல்முறையீட்டு வழக்கில் திடீர் திருப்பம்
மலேசியாவில் 1MDB தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்கின் கடைசி மேல்முறையீடு விசாரணை தொடங்கியுள்ளது.
ஆனால் அவருடைய சட்டக்குழுவின் தலைமை வழக்கறிஞர் திரு. நஜிபின் சார்பாக வாதிட முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட திரு. ஹிஷாம் தே போ தேக் (Hisyam Teh Poh Teik), வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதை நிராகரிக்க எடுத்த முடிவை மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இல்லையெனில் தாம் வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாக அவர் சொன்னார்.
திரு. தேயின் விண்ணப்பம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக Malaysiakini செய்தி நிறுவனம் கூறியது.
திரு. நஜிப் 2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மலேசியப் பிரதமராக இருந்தார்.
2014இலும் 2015இலும் 1MDB-யின் முன்னைய கிளைநிறுவனமாக SRC International நிறுவனத்திலிருந்து 42 மில்லியன் ரிங்கிட் திரு. நஜிபின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதன் தொடர்பில் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது.
அதன் தொடர்பில் அவருக்கு 12 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்து உயர்நீதிமன்றம் ஈராண்டுக்கு முன்னர் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராகத் திரு. நஜிபின் கடைசி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடைபெறுகிறது.