ஆசியா exclusive
மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல்: யாருக்குப் பெரும்பான்மை?
(படம்:Bernama)
மலேசியா மட்டுமல்லாது இந்த 15ஆவது பொதுத்தேர்தல் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2018ஆம் ஆண்டு நடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியின் 60 ஆண்டுகால ஆட்சிக்கு விடை கொடுத்த மக்கள், டாக்டர் மகாதீர் முகமது (Mahathir Mohamad) தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணியைத் தேர்வு செய்தார்கள்.
நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகத் திரு அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி (Ismail Sabri) இருப்பார் என்பதை அம்னோவின் தலைவர் அஹ்மத் ஸாஹித் ஹமிடி (Ahmad Zahid Hamidi) உறுதிப்படுத்தியுள்ளார். பெரிகாத்தான் நெஷானல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முஹிதின் யாசின் (Muhiddin Yassin) அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 3 கட்சிகளும் பலத்த போட்டியை எதிர்கொள்ளுமென்றும் எந்தக் கட்சிக்கும் 3இல் 2 பங்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமென்றும் கூறுகிறார் 45 ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற்ற ஆசிரியர் திரு பிஆர் ராஜன்.
"மலாக்கா, ஜொகூரில் நடந்த மாநிலத் தேர்தலைப் போல 15ஆவது பொதுத்தேர்தல் நிச்சயம் இருக்காது. இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது." சமூக ஊடகங்களில் வெளிவரும் கருத்துகள், கருத்துக் கணிப்புகள் பொதுத்தேர்தலில் எதிரொலிக்காது. கூட்டணி அரசாங்கம் அமையவே அதிக வாய்ப்புள்ளது."
கடந்த பொதுத்தேர்தலில் தவறு செய்துவிட்டோமா என்ற சிந்தனையும் மக்கள் மத்தியில் உள்ளது. அன்வாருக்கு ஒருமுறையாவது வாய்ப்பு தரலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. இந்தச் சூழ்நிலை எந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு என்பதை முடிவுசெய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது என்றார் பிஆர் ராஜன்.
இஸ்மாயில் சப்ரி பிரதமராக முன்மொழியப்பட்டிருப்பது அம்னோவிற்குச் சாதகமான முடிவைக் கொண்டு வரலாம் என்கிறார் அரசியல் பார்வையாளரும் தொழில்முனைவருமான திரு கணேசன்.
"மலேசியாவில் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும் மலாய்க்காரர்களுக்குப் பிடித்த தலைவராக இஸ்மாயில் சப்ரி இருக்கின்றார். அதோடு அவர் பிரதமராக இருந்தபோது மலாக்கா, ஜொகூர் ஆகிய தேர்தல்களில் தேசிய முன்னணி மகத்தான வெற்றி பெற்றது. குறிப்பாக ஜொகூரில் தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைத்துள்ளது."
அமைதியான முறையிலும் ஆர்ப்பாட்டம் இல்லாமலும் இருப்பதால் அவர் நம்பிக்கை தரும் பிரதமர் வேட்பாளராக இருக்கின்றார். இருப்பினும் அன்வார் இதர சமூகத்திற்கு அதிகம் பிடித்த தலைவர் என்பதையும் மறுக்க முடியாது என கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
15ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி மற்ற கட்சிகளைக் காட்டிலும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றும். ஆனால் ஆட்சி அமைக்கும் அதிகாரம் பெறுவதற்குக் கூட்டணி அமைக்க வேண்டிய சூழல்தான் தற்போது நிலவுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.