பயணம் செல்லும் உற்சாகத்தில் மலேசியர்கள்- புத்துயிர் காணுமா சுற்றுலாத் துறை?
பயணம் செல்லும் உற்சாகத்தில் மலேசியர்கள்- புத்துயிர் காணுமா சுற்றுலாத் துறை?
மலேசியாவில் 10 மாதங்களுக்குப் பின்னர், மாநில எல்லைகள் நேற்று முன்தினம் (அக்டோபர் 11) திறந்துவிடப்பட்டுள்ளன.
சாலையில் போக்குவரத்து திரும்பிவிட்டது.
பல நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசலையும் காண முடிகிறது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், மாநில எல்லைகளைக் கடப்பதற்கும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்கிறார் MITA எனும் மலேசிய உள்நாட்டுச் சுற்றுலா சங்கத்தின் நிர்வாகக் குழு அதிகாரி திரு.சண்முகம் கருப்பையா.
சுற்றுலாத் துறை மீட்சியடைய...
இருப்பினும், மலேசியச் சுற்றுலாத் துறை மீட்சியடைய 2 முதல் 3 ஆண்டுகளாகலாம் என்று திரு.சண்முகம் குறிப்பிட்டார்.
COVID-19 நோய்ப் பரவலுக்குப் பின்னர் நாட்டில் முதன் முதலில் திறக்கப்பட்ட சுற்றுலா தளம் லங்காவி (Langkawi). அங்கு செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
அது போல், நாட்டின் மற்ற இடங்களிலும் விரைவில் சுற்றுலா நடவடிக்கைகள் களைகட்டத் தொடங்கும் என நம்புவதாகத் திரு.சண்முகம் கூறினார்.
சலுகைகள், கழிவுகள்:
சுற்றுப்பயணிகளை ஈர்க்க, சுற்றுலா நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள், கழிவுகளையும் வழங்கி வருகின்றன. அதேசமயம், சுற்றுப்பயணிகளைக் கவர விலை குறைவான, தரமான சேவைகளை வழங்கும்படி நிறுவனங்களைச் சங்கம் வலியுறுத்தி வருகிறது
எனத் திரு.சண்முகம் கூறினார்.
பாதுகாப்பு விதிமுறைகள் :
இருப்பினும், அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அச்சமும் நிலவுகிறது.
சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆர்வத்தில் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றத் தவறி விடக்கூடாது எனக் கூறுகிறார் குடும்ப நல மருத்துவரான டாக்டர் K.நடராஜா.
பயணங்கள் மேற்கொள்வதும், சுற்றுலா செல்வதும் மலேசியர்கள் பலரின் பொதுவான விருப்பம். அது பாதுகாப்பாக நடைபெறவேண்டும் என்பதே இப்போதைய கவலை.