ஆசியா செய்தியில் மட்டும்
என்னதான் நடக்கும்? மாறுபட்ட மனநிலையில் மலேசியர்கள்......
மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றது.
பொதுத்தேர்தல் முடிந்து 4 நாள்களாகும் நிலையில் மலேசிய மக்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
ஆகக் கடைசி நிலவரப்படி, மலேசியாவின் இரண்டு கூட்டணிகளின் தலைவர்கள் மாமன்னரைச் சந்தித்துள்ளனர். ஆனாலும் யார் பிரதமர் என்ற முடிவு இன்னும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் சில மலேசிய மக்களின் கருத்துகளைக் கண்டறிய அவர்களை அணுகியது 'செய்தி'.
"இதுவரையில் தேர்தல் முடிவைத் தெரிந்து கொள்வதில் இத்தனை குழப்பங்களும் ஆருடங்களும் இருந்ததாகத் தெரியவில்லை"
இந்தத் தாமதம் பலரையும் பலவாறு சிந்திக்கவும் சிலரைப் பயங்காட்டவும் செய்துள்ளது.நாட்டின் முன்னேற்றத்தையும் நாட்டு மக்களின் வளப்பத்தையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் வாக்களித்த சாமானிய மக்களின் இப்போதைய எதிர்பார்ப்பு"
- தயாஜி, 36 வயது
"மலேசியத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்ததில் மிகவும் மகிழ்ச்சி. மிகப்பெரிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய திருப்தி கிடைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியும் திருப்தியும் நீடிக்கவில்லை"
"புதிய அரசாங்கத்தை அமைக்கும் முடிவில் நீடிக்கும் இழுபறி ஒருவித விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது"
- தெசலோனிக்கா, 21 வயது
"நடப்பு அரசியல் சூழ்நிலை மனநிறைவளிக்கவில்லை. மலேசியக் குடிமகளாக எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன்"
"கூடிய விரைவில் மக்கள் விரும்பும் ஒரு தலைவர் வருவார் என மிகவும் எதிர்பார்க்கிறேன்"
- லில்லி, 56 வயது
"மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது"
அந்த 'ரகசியம்' என்று உடையுமோ என்ற எதிர்பார்ப்பில் நாள்களைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்"
"நாளைக்குள் முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கிறேன்"
- சங்கீதா, 43 வயது
"மலேசியாவின் நடப்பு அரசியல் சூழ்நிலையில் எனக்கு மகிழ்ச்சி இல்லைதான். ஆனாலும் சட்டத்துக்கு உட்பட்டுதான் அனைத்து விவகாரங்களும் ஆராயப்பட்டு வருகின்றன என நான் நம்புகிறேன்"
"அரசாங்கம் அமைந்த பின்னர் வரும் சிக்கல்களைத் தவிர்க்க இந்தக் காத்திருப்பு சரி என நான் நினைக்கிறேன்"
- ரவி, 53 வயது
"மலேசியாவில் இன்னும் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது. ஆனாலும் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தேர்தல் முடிந்து எந்தவொரு கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணிகளுக்கு இடையே நிறையக் கருத்து வேறுபாடுகள் உள்ளன"
"முடிவைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்"
- லெட்சுமணன், 56 வயது