ஒரு திறன்பேசியைக் கண்டுபிடிக்க அணைக்கட்டின் எல்லா நீரையும் வெளியேற்றிய அதிகாரி - வேலையிலிருந்து நீக்கம்
இந்தியாவின் அரசாங்க அதிகாரி ஒருவர் அணைக்கட்டுக்குள் விழுந்த தமது திறன்பேசியைக் கண்டுபிடிக்க அதிலிருந்த நீர் முழுவதையும் வெளியேற்ற உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் கடந்த வாரம் சத்தீஸ்கர் (Chhattisgarh) மாநிலத்திலுள்ள கெர்கட்டா (Kherkatta) எனும் இடத்தில் நிகழ்ந்தது.
அணைக்கட்டுக்கு அருகில் நின்று 'selfie' எடுக்கும்போது ராஜேஷ் விஷ்வாஸ் (Rajesh Vishwas) எனும் அந்த உணவுப் பாதுகாப்பு அதிகாரியின் திறன்பேசி நீருக்குள் விழுந்தது.
அணைக்கட்டிலிருந்து மில்லியன்கணக்கான லிட்டர் நீரை 'பம்ப்' செய்து வெளியேற்ற அவர் உத்தரவிட்டார்.
அதற்கு 3 நாள்கள் பிடித்தன.
திறன்பேசி கிடைத்தது. ஆனால் தண்ணீரில் ஊறி அது கெட்டுப்போயிருந்ததாக BBC செய்தி கூறியது.
திறன்பேசியில் அரசாங்கத்தின் முக்கியத் தரவுகள் இருந்ததால்தான் தாம் அதை மீட்க முயற்சி செய்ததாக விஷ்வாஸ் தமது செயலை நியாயப்படுத்தினார்.
அணைக்கட்டிலிருந்து தாம் வெளியேற்றியது உபரிநீர் என்றும் அது பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகத் தம்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் விஷ்வாஸ் மறுத்துள்ளார்.
ஆனால் இப்படி ஒரு வெயில் காலத்தில் பல இடங்களில் தண்ணீர் தேவைப்படும் நிலையில் விஷ்வாஸின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.
அவர் மீது விசாரணை நீடிப்பதாக BBC செய்தி நிறுவனம் கூறுகிறது.