வட கொரியாவில் 296,000க்கும் மேற்பட்டோருக்குக் காய்ச்சல்
வடகொரியாவில் மேலும் 296,000க்கும் மேற்பட்டோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு COVID-19 ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
மேலும் 40க்கும் மேற்பட்டோர் வடகொரியாவில் மாண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
அத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பதால், கிருமித்தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்வது கடினமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உண்மையிலேயே COVID-19ஆல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடுமென்று நம்பப்படுகிறது.
வடகொரியாவைத் தோற்றுவித்த நாளிலிருந்து ஆக மோசமான நெருக்கடியை எதிர்நோக்குவதாக அதன் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) கூறியிருக்கிறார்.
அங்கு ஈராண்டுகளுக்கும் மேலாகக் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
நோய்ப்பரவல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஒருமைப்பாட்டையும் கவனத்தையும் செலுத்தும்படி திரு. கிம் கேட்டுக்கொண்டார்.
வடகொரியாவில் தற்போது அதிகபட்ச அவசரநிலை தனிமைப்படுத்தும் அமைப்பு நடப்பில் உள்ளது.
இதுவரை அங்கு யாருக்கும் கிருமித்தொற்றுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை.
கிருமித்தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் மருந்துகளையும் வடகொரியா வாங்கவில்லை.
-Reuters